Breaking News
தமிழகத்தில் அனேக இடங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை குமரி கடல் பகுதியில் நீடிப்பதால் அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை குமரி கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை அருகில் நீடிக்கிறது. மேலும் அதே பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஒன்றும் நிலவி வருகிறது.

இதன் காரணமாக கடலோர தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், தெற்கு உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்.

இந்த வானிலை மாற்றத்தால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்யும். டெல்டா மாவட்டங்கள் முதல் கடலூர் வரை சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை இருக்கும்.

சென்னையை பொறுத்தவரையில் வறண்ட வானிலையே நிலவும். நகரின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ராமேசுவரம், ராமநாதபுரம், பாம்பன், இரணியல், திருச்செந்தூர், குளச்சல் ஆகிய இடங்களில் தலா ஒரு செ.மீ. மழை பெய்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.