Breaking News
மத்திய அமைச்சர் அனந்த குமார் மறைவு : ராகுல் காந்தி, குமாரசாமி, மு.க ஸ்டாலின் இரங்கல்

மத்திய அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அனந்தகுமார் (வயது 59) இன்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்தார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அனந்தகுமார் கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அனந்த குமார் சிகிச்சை பலனளிக்காமல் உயிர் இழந்தார். மத்திய இரசாயனம், உரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்த அனந்தகுமார் மறைவுக்கு, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் கூறியிருப்பதாவது:- “ மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவு செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைட்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், நான் எனது மிகச்சிறந்த நண்பரை இழந்து விட்டேன். அனந்தகுமார் ஒரு மதிப்பு மிக்க அரசியல்வாதி. எம்.பியாகவும், மத்திய மந்திரியாகவும் மிகச்சிறந்த பங்களிப்பை அவர் நாட்டுக்கு அளித்தார். அவரது ஆன்மா சந்தியடையட்டும். அவரது இழப்பை தாங்கும் வல்லமையை அவரது குடும்பத்தினருக்கு இறைவன் வழங்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “ மத்திய மந்திரி திரு அனந்தகுமார் மறைவு செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.