Breaking News
கேரளாவில் மேலும் ஒரு கோவிலில் சர்ச்சை

பரிமலையை தொடர்ந்து கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலும் இந்து அல்லாத பெண் ஒருவர் நுழைந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

புகழ் பெற்ற கோவில்

சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்த பிறகு, பெரும் சர்ச்சை ஏற்பட்டது. ஐந்து வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க முடியாது என அய்யப்ப பக்தர்களும், சபரிமலை தந்திரி குடும்பத்தினரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புடன் வரும் மண்டல, மகரவிளக்கு நடை திறப்பை எதிர்கொள்ள கேரள மாநில அரசு தீர்மானமாக உள்ளது.

இச்சூழ்நிலையில், மேலும் ஒரு கோவிலிலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ளது புகழ் பெற்ற பத்மநாபசுவாமி கோவில். இக்கோவிலின் பாதாள அறைகளில், ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், ஆபரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கையும் சுப்ரீம் கோர்ட் தான் விசாரித்து வருகிறது.

இந்து அல்லாத பிற மத பெண்

பத்மநாபசுவாமி கோவிலின் உள்ளே இந்து அல்லாத பிற மதத்தினர் செல்ல தடை உள்ளது. இக்கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் அல்பாசி உற்சவ விழா நவ., 5ம் தேதி துவங்கியது. நேற்று (நவ.,11ம் தேதி) விழா பூஜைகள் நடந்து கொண்டிருந்த போது இந்து அல்லாத பெண் ஒருவர் கோவிலுக்குள் நுழைந்து விட்டதாக தகவல் வெளியானது.

இதைக் கேள்விபட்ட தலைமை தந்திரி தாரநல்லூர் நம்பூதிரி பூஜைகளை உடனே நிறுத்த உத்தரவிட்டார். கோவில் கதவுகள் மூடப்பட்டு கோவிலை புனிதப்படுத்தும், சுத்திகிரி பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து நேற்று மாலை நடக்க இருந்த,’எழுநெல்லது’ பூஜைகளும் நிறுத்தப்பட்டன.

இது குறித்து கோவில் ஊழியர்கள் கூறுகையில், ‘ கோவிலுக்கு வெளியே, ‘சிசிடிவி’ கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பிற மத ஆடை அணிந்த பெண் ஒருவர் கோவில் அருகே வந்து, தான் அணிந்து இருந்த ஆடையை அகற்றி விட்டு, கோவிலுக்குள் அனுமதிக்கப்படும் பாரம்பரிய ஆடையை அணிந்து கோவிலுக்குள் நுழைந்தது, ‘சிசிடிவி’யில் பதிவான காட்சிகள் மூலம் தெரிய வந்தது. இது குறித்து போலீசாரிடமும் புகார் அளிக்கப்பட்டது’ என்றனர்.

இக்கோவிலில் இன்று முதல் வழக்கமான பூஜைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.