Breaking News
சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு : உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை இருந்து வந்த நிலையில், அங்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதற்கு அய்யப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யமாட்டோம் என்றும், தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்து இருந்தார். இதேபோல் சபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டும் மறுஆய்வு மனு தாக்கல் செய்வது இல்லை என்று தீர்மானித்தது.

ஆனால், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதி வழங்கி பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து தேசிய அய்யப்ப பக்தர்கள் சார்பில் அந்த அமைப்பின் தலைவர் ஷைலஜா விஜயன் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தார். கடந்த அக்டோபர் 9-ந்தேதி இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது. ஆனால், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட், வழக்கு பட்டியலிடப்பட்ட பின் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தது.

அதன்படி சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிரான மறு ஆய்வு மனு மீது இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெறுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.