Breaking News
உலக கோப்பை ஆக்கி: ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் ஜெர்மனி கால்இறுதிக்கு முன்னேற்றம்

உலக கோப்பை ஆக்கி போட்டியில் ஜெர்மனி அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் கால்இறுதிக்கு முன்னேறியது.
ஜெர்மனி வெற்றி

16 அணிகள் இடையிலான 14–வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இதில் ‘டி’ பிரிவில் நேற்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனி 5–3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. ஜெர்மனி அணி தொடர்ச்சியாக 3 வெற்றிகளுடன் (ஹாட்ரிக்) தனது பிரிவில் முதலிடத்தை பிடித்து கால்இறுதிக்குள் நேரடியாக நுழைந்தது. ஜெர்மனி அணியில் டிம் ஹெர்ஸ்புருச் (2), கிறிஸ்டோபர் ருர் (2), மில்ட்காவ் ஆகியோர் கோல் போட்டனர்.

இரவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 5–1 என்ற கோல் கணக்கில் 4 முறை சாம்பியனான பாகிஸ்தானை ஊதித்தள்ளியது. தோல்வி அடைந்தாலும் பாகிஸ்தான் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு முடிந்து போய் விடவில்லை. இந்த பிரிவில் 2–வது இடத்தை நெதர்லாந்தும் (6 புள்ளி), 3–வது இடத்தை பாகிஸ்தானும் (1 புள்ளி) பெற்று கால்இறுதி வாய்ப்பில் நீடிக்கின்றன. ஒரு புள்ளி பெற்ற மலேசியா, பாகிஸ்தானை விட கோல் வித்தியாசம் அடிப்படையில் மிகவும் பின்தங்கியதால் போட்டியை விட்டு வெளியேறியது.
2–வது சுற்றில் யார்–யார்?

லீக் சுற்று நிறைவடைந்த நிலையில், நான்கு பிரிவிலும் முதல் இடத்தை பிடித்த அணிகள் நேரடியாக கால்இறுதியை எட்டின. அடுத்து 2 மற்றும் 3–வது இடங்களை பெற்ற அணிகள் ‘கிராஸ்ஓவர்’ அடிப்படையில் 2–வது சுற்றில் மோதும். இதன்படி 2–வது சுற்றில் இன்றைய ஆட்டங்களில் இங்கிலாந்து–நியூசிலாந்து (மாலை 4.45 மணி) பிரான்ஸ்–சீனா (இரவு 7 மணி) அணிகளும், நாளைய ஆட்டங்களில் பெல்ஜியம்–பாகிஸ்தான், நெதர்லாந்து–கனடா அணிகளும் மோதுகின்றன.

இதில் நெதர்லாந்து–கனடா இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, 13–ந்தேதி நடக்கும் கால்இறுதியில் இந்திய அணியை எதிர்கொள்ளும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.