Breaking News
மேற்கு வங்காளத்தில் போராடும் மருத்துவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் டாக்டர்கள் வேலைநிறுத்தம்

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கடந்த 10-ந் தேதி உயிரிழந்ததால், அவரது உறவினர்கள் அங்கு பணியாற்றி வரும் 2 பயிற்சி டாக்டர்களை தாக்கினர். இதைக் கண்டித்து 11-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டாக்டர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்களுக்கு ஆதரவாகவும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு முழுவதும் கடந்த 14-ந் தேதி முதல் 3 நாட்கள் போராட்டங்கள் நடந்தன. இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் 17-ந் தேதி (இன்று) வேலைநிறுத்தம் நடத்தவும் இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

அதன்படி இன்று (காலை 6 மணி முதல்) காலை முதல் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி வரை டாக்டர்களின் வேலைநிறுத்தம் நாடு முழுவதும் நடைபெறுகிறது. தமிழகம், தெலுங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் கருப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவர்கள் பணி செய்து வருகின்றனர்.

மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட அத்தியாவசியம் இல்லாத பணிகளை டாக்டர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சைகள் வழக்கம் போல நடைபெறும் என இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேலும், டாக்டர்கள் மீதான இதுபோன்ற தாக்குதல் நடத்துபவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையில் நாடு முழுவதும் ஒரே சீரான சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும் எனவும் இந்திய மருத்துவ சங்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

அதேநேரம் டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சட்டம் இயற்றுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்சவர்தன் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மேற்கு வங்காளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள் 7-வது நாளாக தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். டாக்டர்களின் வேலைநிறுத்தத்தால் நாடு முழுவதும் நோயாளிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இதற்கிடையே, நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணி புரியும் மருத்துவர்களில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சட்டம் இயற்றக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.