Breaking News
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்றனர் தலைவர், துணைத்தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த மாதம் 27 மற்றும் 30-ந்தேதிகளில் 2 கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இதற்கான வாக்குகள் கடந்த 2-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 27 மாவட்டங்களில் உள்ள 2 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவியிடங்கள் தவிர்த்து மீதம் உள்ள 513 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் விவரம் வெளியிடப்பட்டது. இதேபோன்று 3 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியிடங்கள் தவிர்த்து 5 ஆயிரத்து 87 பதவியிடங்களுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் விவரம் வெளியிடப்பட்டது.

இதேபோன்று 10 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்கள் தவிர்த்து மீதம் உள்ள 9 ஆயிரத்து 614 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் விவரம் வெளியானது. அதேபோல், தற்போது 76 ஆயிரத்து 720 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் விவரம் மட்டும் வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்ட தலைநகரங்களில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து அலுவலகங்களில் வெற்றி பெற்ற மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்களும், ஒன்றியங்களில் உள்ள அலுவலகங்களில் ஒன்றிய கவுன்சிலர்களும் மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான பதவி ஏற்பு நிகழ்ச்சி நேற்று காலை 10 மணி அளவில் நடந்தது. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வெற்றி சான்றிதழ்களை கொண்டு வந்தனர். மூத்த உறுப்பினர் தனக்கு தானே பதவி ஏற்றுக் கொண்டு மற்ற உறுப்பினர்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.

மாவட்ட பஞ்சாயத்து அலுவலகங்களில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் அந்தப்பகுதிகளில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. தேர்தலில் வெற்றி பெற்றவர்களுடன் அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் அரசியல் கட்சி தொண்டர்கள் திரண்டதால் எப்போதும் வெறிச்சோடி காணப்படும் ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகங்கள் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. பதவி ஏற்றுக் கொண்டவர்களுக்கு அனைவரும் பூச்செண்டுகள் கொடுத்தும், சால்வை அணிவித்தும் வாழ்த்து கூறினார்கள். அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நிறைவடைந்தது.

இதனை தொடர்ந்து ஊராட்சி துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவியிடங்களுக்கு மறைமுக தேர்தல் வரும் 11-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் காலை 10 மணிக்கு தலைவர் தேர்தலும், பகல் 2 மணி அளவில் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலும் நடக்கிறது.

இந்த தேர்தலில் ஏற்கனவே பதவி ஏற்றுக் கொண்டுள்ள ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் ஓட்டு போட்டு, ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர்களை தேர்வு செய்வார்கள். அதேபோல் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத்தலைவரை ஏற்கனவே பதவி ஏற்றுள்ள மாவட்ட கவுன்சிலர்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்வார்கள். வெற்றி பெற்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர்கள் ஓட்டு விவரம் எண்ணப்பட்டு உடனுக்குடன் அறிவிக்கப்படும்.

மேற்கண்ட தகவலை மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறினார்கள்.

அரசியல் சார்புடன் நடத்தப்பட்ட மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கான தேர்தல் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர், ஒன்றிய தலைவர் மற்றும் ஒன்றிய துணைத்தலைவர் பதவியிடங்களை பிடிக்க தான் கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.

இதில் குறிப்பாக 5 ஆயிரத்து 87 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களில் அ.தி.மு.க. 1,781 இடங்களும், தி.மு.க. 2 ஆயிரத்து 99 இடங்களையும் பிடித்து உள்ளது. இதுதவிர, காங்கிரஸ் 132, பா.ஜ.க. 85, தே.மு.தி.க. 99, இந்திய கம்யூனிஸ்டு 62, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 33, மற்றவை 796 இடங் களையும் கைப்பற்றி உள்ளது.

இதேபோல் மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களை பொருத்த வரையில், தேர்தல் நடந்த 513 இடங்களில் அ.தி.மு.க. 214, தி.மு.க. 243, காங்கிரஸ் 15, பா.ஜ.க. 7, தே.மு.தி.க. 3, இந்திய கம்யூனிஸ்டு 7, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 2, மற்றவை 22 ஆகிய இடங்களை பிடித்து உள்ளனர்.

அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் வெற்றி பெற்று உள்ளனர்?, இதுதவிர சுயேச்சைகள் மற்றும் சிறிய கட்சிகளை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் வெற்றி பெற்று உள்ளனர்? இவர்களுடைய முகவரி, தொலைபேசி எண்கள் போன்றவற்றை சேகரித்து அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். பதவிகளை பிடிக்க அரசியல் கட்சியினரிடம் கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.

மேற்கண்ட தகவலை மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறினார்கள்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.