Breaking News
காரமடை பரளிக்காடு செல்ல 14ம் தேதி முதல் அனுமதி சுற்றுலா பயணிகளுக்கு மரவீடுகள்

கோவை மேட்டுப்பாளையம் ரோடு காரமடையில் இருந்து வெள்ளியங்காடு சாலையில் பில்லூர் அணை அருகே பரளிக்காடு உள்ளது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சுற்றுலா தலம் கோவையில் இருந்து சுமார் 70கி.மீ தொலைவில் இருக்கிறது. சனி, ஞாயிறு, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வார நாட்களில் 40 பேர் கொண்ட குழுவினர் சென்றால் மட்டும் அனுமதி வழங்கப்படும்.

பெரியவர்களுக்கு ரூ.300, சிறியவர்களுக்கு ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு வனத்துறையில் முன்பதிவு செய்ய வேண்டும். இதில், சுமார் 4 கிலோ மீட்டர் பரிசல் பயணம், ஆற்றில் பாதுகாப்பான குளியல், உணவு, மாலை நேரத்தில் மலையில் டிரக்கிங் என ஒரு நாள் சுற்றுலா தலமாக இருந்தது. இந்நிலையில், தற்போது சுற்றுலா பயணிகளுக்கு தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளுக்கு 14ம் தேதி முதல் சுற்றுலா செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான புக்கிங் துவங்கியுள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியம் கூறியதாவது: பரளிகாட்டில் சுற்றுலா பயணிகள் தங்க வசதி ஏற்படுத்தியுள்ளோம். 8 பேர் தங்கும் வசதி கொண்ட 3 மரவீடுகள், 5 பேர் தங்கும் வசதி கொண்ட 3 மரவீடுகள் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் பறவைகளை கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இது தவிர வழக்கம் போல் பரிசல், ஆற்று குளியல், டிரக்கிங் அழைத்து செல்லப்படும். விரைவில் மரத்தில் பரண் அமைத்து விலங்குகள் தண்ணீர் குடிப்பதை சுற்றுலா பயணிகள் பார்க்கவும், ஆற்றில் மீன் பிடித்து விளையாடவும், ஒரு மரத்தில் இருந்து மற்றொரு மரத்திற்கு கயிறு மூலம் ஜிப் லைன் அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். வரும் 14ம் தேதி முதல் புது பொழிவுடன் பரளிக்காடு செயல்பட உள்ளது. புக்கிங் செய்ய 90470-51011 அல்லது 0425-4275423 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.