Breaking News
ஏப்., 17ல் காத்திருக்கும் கிளைமாக்ஸ்; சசிகலா பொது செயலர் நியமனம் தப்புமா?

சசிகலா பொது செயலராக நியமிக்கப்பட்டதையும் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்தால், அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் அ.தி.மு.க., அம்மா கட்சி தரப்பினர் ஆழ்ந்துள்ளனர்.

புகார்:

அ.தி.மு.க., கட்சி விதிகளின் படி, அக்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஓட்டளித்தே ஒரு பொது செயலரை தேர்வு செய்ய முடியும். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பொது செயலர் இல்லாத நிலையில், முந்தைய பொது செயலரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள்தான் கட்சியை வழிநடத்த முடியும்.

இதனடிப்படையில் சசிகலாவின் நியமனம் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவிக்கக் கோரி, அ.தி.மு.க.,வின் எம்.பி.,யான சசிகலா புஷ்பாவும், அ.தி.மு.க., புரட்சித் தலைவி அம்மா கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., கே.சி.பழனிச்சாமியும், புகார் அளித்துள்ளனர்.

17ம் தேதி:

இது தொடர்பான விசாரணையை வரும் ஏப்., 17ல் நடத்துவதாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சமீபத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு அ.தி.மு.க., அம்மா கட்சியின் வேட்பாளர் தினகரன் பணப்பட்டுவாடா செய்தது ஆதாரங்களுடன், தேர்தல் ஆணையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதால், தேர்தலையே ரத்து செய்து அறிவித்துள்ளது ஆணையம்.

இந்நிலையில், ஏப்., 17ல் நடக்கும் விசாரணையிலும், சசிகலா பொதுச் செயலராக நியமிக்கப்பட்டது தவறு என, தேர்தல் ஆணையம் தீர்ப்பு சொல்லுமானால், அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில், அக்கட்சியினர் ஆழ்ந்துள்ளனர்.

பலமான யோசனை:

ஒருவேளை, அப்படி அறிவிக்கப்பட்டால், சசிகலாவால் கட்சியின் இணைக்கப்பட்டு, துணைப் பொதுச் செயலர் பதவி பெற்ற தினகரனின் நிலை கேள்விக்குறியாகும். அவர், கட்சியின் அடிப்படை உறுப்பினராகவே இல்லாத நிலை ஏற்பட்டு, அவருக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லாத நிலை ஏற்படும். அதனால், அவரால், கட்சியை இப்போது போல தொடர்ந்து வழிநடத்த முடியாத இக்கட்டான நிலை ஏற்படும். இப்படிப்பட்ட இக்கட்டை தவிர்க்க, இப்போதே, கட்சிக்குள் பலமான யோசனை நடக்கிறது.

தலைமை?

அப்படியொரு நிலை உருவாகும் பட்சத்தில், சசிகலாவின் தீவிர ஆதரவாளராக தற்போது இருக்கும் செங்கோட்டையன் அல்லது ஜெயக்குமார் தலைமையில், கட்சியை தொடர்ந்து நடத்த சசிகலா திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.