Breaking News

வர்தா புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு இன்று தமிழகம் வர உள்ளது. 8 பேர் கொண்ட குழு தமிழகம் வரவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வர்தா புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து புயல் பாதிப்பால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்யவும், மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் ரூ.22 ஆயிரத்து 573 கோடி நிவாரண நிதி தேவை என பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் கோரிக்கை மனு அளித்தார். புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்பி வைக்கவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: மத்திய உள்துறை இணை செயலாளர் பிரவீன் வசிஷ்டா தலைமையிலான 8 பேர் கொண்ட இந்த குழுவினர் இன்று தமிழகம் வந்து சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வர்தா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.