Breaking News
சாம்பியன்ஸ் கோப்பை விவகாரம்: இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கு நிர்வாக கமிட்டி எச்சரிக்கை

வருவாய் பகிர்வு முறையில் மாற்றம் செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) எடுத்த முடிவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் டெல்லியில் வருகிற 7–ந் தேதி நடக்கிறது. இதில் இங்கிலாந்தில் ஜூன் 1–ந் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை இந்திய அணி புறக்கணிக்கும் முடிவை எடுக்க முயற்சிகள் நடப்பதாக செய்திகள் வெளியாயின. இதற்கிடையில் சாம்பியன்ஸ் கோப்பை விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், நிர்வாக கமிட்டியின் ஒப்புதல் பெறாமல் எந்த இறுதி நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என்று நிர்வாக கமிட்டி தலைவர் வினோத்ராய் இ–மெயில் அனுப்பி இருந்தார். இந்த நிலையில் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் நிர்வாக கமிட்டி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அதில், ‘சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் நலனுக்கு எதிராக முடிவு எடுக்கப்பட்டால் நிர்வாக கமிட்டி, சுப்ரீம் கோர்ட்டை அணுக வேண்டியது இருக்கும்’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.