Breaking News
மீடூ விவகாரம்; மத்திய மந்திரி அக்பர் மீது  2 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு

மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பர், பத்திரிகையாளராக இருந்து அரசியலுக்கு வந்தவர். அவர் பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றிய காலத்தில் சக பெண் பத்திரிகையாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்போது புகார் எழுந்துள்ளது.
ஆனால் தன் மீதான பாலியல் புகார்களை மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் மறுத்துள்ளார். இது தொடர்பாக நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்ட அவர், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என விளக்கம் அளித்து இருந்தார். மேலும் தன்மீது பாலியல் புகார் கூறியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் கூறியிருந்தார்.

அதன்படி நேற்று அவர் பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது கோர்ட்டில் தனிநபர் குற்ற அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். எம்.ஜே.அக்பர் சார்பில் வக்கீல் சந்தீப் கபூர், இந்த மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் ‘மீ டூ’ இயக்கம் மூலம் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட பெண் பத்திரிகையாளர்கள் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கி இருந்தனர். இதில் பிரியா ரமணி, கசாலா வகாப், ஷுமா ரகா, அஞ்சு பாரதி உள்ளிட்ட பிரபல பத்திரிகையாளர்களும் அடங்குவர்.

இந்த நிலையில், மந்திரி அக்பர் மீது இன்று 2 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளனர்.

பெண் பத்திரிகையாளரான துஷிடா பட்டேல் கூறும்பொழுது, சில வேலைக்காக என்னை அவரது ஓட்டல் அறைக்கு அக்பர் வர சொன்னார். நான் சென்றபொழுது, உள்ளாடை அணிந்த நிலையில் அவர் கதவை திறந்து விட்டார் என தெரிவித்துள்ளார்.

கடந்த 1990ம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தின்பொழுது, தி டெலிகிராப் பத்திரிகையில் 22 வயது நிறைந்த பட்டேல் பயிற்சி பெற்று வந்துள்ளார்.

அதன்பின் ஐதராபாத்தில் டெக்கான் கிரானிகிள் பத்திரிகையில் பணிபுரிந்தபொழுது, 2 முறை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார் என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

இதேபோன்று தொழிலதிபரான சுவாதி கவுதம் கூறும்பொழுது, கொல்கத்தா நகரில் புனித சேவியர் கல்லூரியில் மாணவியாக இருந்த நான் நிகழ்ச்சி ஒன்றிற்காக சிறப்பு பேச்சாளராக மந்திரி அக்பரை அழைக்க சென்றேன். அவர் ஓட்டல் அறையில் குளியல் ஆடையை அணிந்தபடி என்னை வரவேற்றார்.

எனக்கு குடிக்க மதுபானம் கொண்டு வா என்ற அவர் என்னை நோக்கி கண்ணாடி கிளாஸ் ஒன்றை உருட்டி விட்டார். நான் கீழே குனிந்து அதனை எடுத்து அவரை நோக்கி திருப்பி உருட்டி விட்டேன். அவரை நோக்கி கடின பார்வை பார்த்து விட்டு, எழுந்து அந்த அறையில் இருந்து, முடிந்தவரை அந்த குளியல் ஆடை அணிந்தவரிடம் இருந்து தொலைவை நோக்கி வெளியேறினேன் என தெரிவித்துள்ளார்.

இதனால் அக்பருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ள பெண்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.