Breaking News
விற்பனைக்கு வரும் என்.டி.ஆர்., வீடு
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு திரைப்பட உலக சூப்பர் ஸ்டாருமான என்.டி.ராமராவ் சென்னையில் வசித்த வீடு, தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

என்.டி.ராமராவ், நடிகரான துவக்க காலத்தில், சென்னையில் ரங்கராஜபுரம் பகுதியில் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தார். 1953ம் ஆண்டில், 59/28, பசுல்லா ரோடு, தி.நகர், சென்னை என்ற முகவரியில் உள்ள 8,000 சதுர அடி பரப்பளவு கொண்ட வீட்டை மற்றொரு நடிகரான கஸ்தூரி சிவாராவ் என்பவரிடம் இருந்து வாங்கினார்.

அதிகாலை 3.30 மணி..

இந்த வீட்டின் கீழ் பகுதியில் அலுவலகம், மேக்கப் அறை, வரவேற்பாளர் அறை ஆகியவை இருந்தன. முதல் தளத்தில் இருந்த அறையில் என்.டி.ஆர்., குடும்பத்தினர் வசித்து வந்தனர். அதிகாலை, 3.30 மணிக்கு எழுந்து விடும் பழக்கம் கொண்ட என்.டி.ஆர்., காலை, 6.00 மணிக்கு அரிசி சாதம் மற்றும் சிக்கனுடன் காலை உணவை முடித்து விட்டு 7 மணிக்கு மேக்கப்புடன் படபிடிப்புக்கு தயாராகி விடுவார். இரவு 8.30 மணிக்கு சப்பாத்தி மற்றும் பால் சாப்பிட்டு விட்டு தூங்க சென்று விடுவார். வெறும் தரையில் படுக்கும் பழக்கம் கொண்டவர் என அவரது நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வீட்டில் வசித்து வந்த என்.டி.ஆர்., பின், ஐதராபாத் சென்று விட்டார். அவர் வாழ்ந்த சென்னை வீடு தற்போது விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திராவில் வசிக்கும் அவரது ரசிகர்கள் திருப்பதிக்கு செல்லும் போதெல்லாம், சென்னைக்கு வந்து என்.டி.ஆர்., வசித்த வீட்டை பார்த்து விட்டு செல்லும் வழக்கம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.