அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்
அந்தமான் கடற்பகுதியில் 7ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வினால் தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும் நாளையும் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், பல இடங்களில் பலத்த கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் நாளை மறுநாள் மழை தொடர்பாக முன்னெச்சரிக்கை எதுவும் இல்லை.
இதன்பிறகு 7ம் தேதி அந்தமான் கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதேபோல் அந்தமான் நிகோபர் தீவுகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.