Breaking News
லா லிகா கால்பந்து: பார்சிலோனா அணி ஏமாற்றம்

லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது.
பதிவு: ஜூன் 21, 2020 05:15 AM
மாட்ரிட்,

லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பார்சிலோனா அணி, செவில்லா கிளப்பை எதிர்கொண்டது. பந்தை கட்டுப்பாட்டில் (64 சதவீதம்) வைத்திருப்பதிலும், ஷாட்டுகள் அடிப்பதிலும் பார்சிலோனா அணி கணிசமாக ஆதிக்கம் செலுத்திய போதிலும் எதிரணியின் தடுப்பு அரணை கடைசி நிமிடம் வரை உடைக்க முடியாமல் ஏமாற்றத்திற்கு உள்ளானது.

பார்சிலோனா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி ‘பிரிகிக்’ வாய்ப்பில் அடித்த ஒரு ஷாட் கம்பத்திற்கு மேலாக பறந்தது. இதே போல் லுகாஸ் ஒகாம்போஸ் அடித்த பந்தும் கம்பத்தில் பட்டு மயிரிழையில் நழுவியது. இதனால் இந்த ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது. முன்னதாக முதல் பாதி ஆட்டம் நிறைவடையும் சமயத்தில் இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் பனியனை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பார்சிலோனா இதுவரை 30 ஆட்டங்களில் விளையாடி 20 வெற்றி, 5 டிரா, 5 தோல்வி என்று 65 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. 29 ஆட்டங்களில் விளையாடி 62 புள்ளிகளுடன் உள்ள ரியல்மாட்ரிட் அணி அடுத்த லீக்கில் வெற்றி பெற்றால் பார்சிலோனாவை சமன் செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.