Breaking News

3 மேம்பாலங்கள்

சென்னையில் வடபழனி, அமைந்தகரை அண்ணா வளைவு, ரெட்டேரி சிக்னல் ஆகிய 3 இடங்களில் கட்டப்பட்டிருந்த மேம்பாலங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படாமல் இருந்து வந்தது.

vadapalani-bridge
இதில், ரெட்டேரி மேம்பாலத்தின் ஒரு பகுதி மட்டுமே கட்டி முடிக்கப்பட்டிருந்தது.

மேலும், அண்ணா வளைவு அருகேயுள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதி ஏற்கனவே திறக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த 3 மேம்பாலங்களையும் உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்காக திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவ்வாறு திறக்கப்படவில்லை என்றால், பா.ம.க.வே மேம்பாலங்களை திறக்கும் என்றும் அறிவித்திருந்தார்.

திடீரென திறப்பு

இந்த நிலையில், நேற்று அதிகாலை முதல், இந்த 3 மேம்பாலங்களும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திடீரென திறந்துவிடப்பட்டன. அதிகாரிகளே இதற்கான நடவடிக்கையை எடுத்திருந்தனர். 3 மேம்பாலங்களும் ஒரே நாளில் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அந்தப் பகுதிகளில், போக்குவரத்து நெரிசலும் ஓரளவுக்கு குறைந்தது.

இந்த நிலையில், 3 மேம்பாலங்கள் திறக்கப்பட்டது பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றி என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் கட்டப்பட்டுள்ள 3 மேம்பாலங்களையும் பா.ம.க. சார்பில் திறந்துவைக்க வேண்டும் என்று விரும்பினோம். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அந்தப் பாலங்களை பொதுமக்கள் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் எங்களுக்கு மகிழ்ச்சியே. இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.