Breaking News
தென் மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிக்கிறது

தென் மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிக்கிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் தென் கடலோர மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 30-ந்தேதி வரை சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை இந்த வருடம் தாமதமாக தொடங்கியது. தாமதமாக தொடங்கினாலும் போதிய அளவுக்கு மழை பெய்யும் என்று மக்களும், விவசாயிகளும் பெரும்பாலும் எதிர்பார்த்தனர்.

ஆனால் வடகிழக்கு பருவமழை போதிய அளவுக்கு பெய்யவில்லை. வார்தா புயல் சென்னையை கடந்து சென்றதால் ஓரளவுக்கு சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை வழக்கமாக டிசம்பர் 31-ந்தேதி முடிவடையும். அதன்படி பார்த்தால் 4 நாட்கள் தான் உள்ளது.

எனவே வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது.

இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

31-ந்தேதி முடிவடைகிறது

வழக்கமாக வட கிழக்கு பருவமழை டிசம்பர் 31-ந்தேதி முடிவடையும். வடகிழக்கு பருவமழை முடிவடைவது குறித்து இந்திய வானிலை மையம் தெரிவித்த பிறகுதான் நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.தென் மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலை கொண்டு உள்ளது. அது வலுவற்ற நிலையில் உள்ளது. குளிர் அதிகமாக இருப்பதால் தென் கடலோர மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 30-ந்தேதி வரை சில இடங்களில் மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை தான் நிலவும்.

இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.