Breaking News
சமாஜ்வாடி கட்சி சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்திடம் முலாயம்சிங் முறையீடு

சமாஜ்வாடி கட்சியின் சைக்கிள் சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்திடம் முலாயம் சிங் யாதவ் நேற்று முறையிட்டார்.

உச்சக்கட்ட மோதல்

உத்தரபிரதேசத்தில் எந்த நேரத்திலும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் அங்கு ஆளும் கட்சியான சமாஜ்வாடியில் உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டு இருக்கிறது. சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிப்பதில் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவுக்கும், கட்சியின் மாநில தலைவரும், முலாயம் சிங்கின் தம்பியுமான சிவபால் சிங்குக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தை முலாயம் சிங்கின் மற்றொரு தம்பி ராம்கோபால் யாதவ் நேற்று கூட்டி கட்சியின் தேசிய தலைவராக அகிலேஷ் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தார். மேலும் கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து சிவபால் சிங் நீக்கப்பட்டார். பின்னர் கட்சி தலைமை அலுவலகத்தையும் அகிலேஷ் யாதவ் தரப்பினர் கைப்பற்றினர்.

முலாயம் முறையீடு

தற்போது அக்கட்சியின் சைக்கிள் சின்னத்தை கைப்பற்ற அகிலேஷ் மற்றும் முலாயம் தரப்பினர் இடையே கடும் முயற்சி நடந்து வருகிறது. இதனால் கட்சியின் சின்னத்தை மீட்க முலாயம் சிங் நேற்று டெல்லி சென்றார். அவருடன் சிவபால் சிங், அமர் சிங், ஜெயப்பிரதா மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளிடம் மனு அளித்தார்.

அந்த மனுவில், “சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவர் நான் தான். ஏனெனில் எதிர் தரப்பினர் தேசிய செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தில், தேசிய தலைவராக அகிலேஷ் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டு உள்ளனர். அதே சமயம் என்னை அந்த பதவியில் இருந்து நீக்கியதாக குறிப்பிடவில்லை” என்று முலாயம் சிங் கூறியிருந்தார்.

இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடம் நீடித்தது. அங்கிருந்து வெளியே வந்த முலாயம் சிங், செய்தியாளர்களை சந்திக்காமல் புறப்பட்டு சென்றார்.

இதனிடையே புதிய தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட உத்தரபிரதேச முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சின்னம் யாருக்கு?

இந்த பிரச்சினை குறித்து தேர்தல் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், பொதுவாக ஒரு கட்சியில் இரு தரப்பினர் இடையே போட்டி ஏற்பட்டால் பெரும்பான்மை நிர்வாகிகள் உள்ள கட்சிக்கு அதன் சின்னமும், மற்றொரு தரப்பினருக்கு வேறொரு சின்னமும் ஒதுக்கலாம். அதே சமயம் இரு தரப்பினரும் சமபலத்துடன் இருந்தால் அக்கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்க வாய்ப்பு உள்ளது. அப்போது இரு தரப்பினரும் வேறு கட்சி பெயரிலும், வெவ்வேறு சின்னத்திலும் போட்டியிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுவார்கள் என்றார்.

உத்தரபிரதேசத்தில் எந்த நேரமும் தேர்தல் நடத்தப்படலாம் என்ற சூழ்நிலையில் அங்கு சமாஜ்வாடியின் சைக்கிள் சின்னத்தை முடக்கவே அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

நன்றி :தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.