Breaking News
சென்னை ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் புராவ்– திவிஜ் ஜோடி ஒற்றையரில் பெனோய்ட் பேர் அசத்தல் வெற்றி

சென்னை ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் புராவ் ராஜா– திவிஜ் சரண் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

பெனோய்ட் பேர் வெற்றி
சென்னை ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த போட்டியில் நேற்று ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டங்கள் நடந்தன.

ஒரு ஆட்டத்தில் போட்டித்தரநிலையில் 5–வது இடம் வகிக்கும் பெனோய்ட் பேர், இங்கிலாந்தின் அல்ஜாஸ் பெடேனை எதிர்கொண்டார். இதில் பெனோய்ட் பேர் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். மறுமுனையில் இடுப்பு பகுதியில் வலியால் அவதிப்பட்ட பெடேன், சிகிச்சை எடுத்துக் கொண்டு விளையாடினார். என்றாலும் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறினார். எதிராளியின் ஒரு சர்வீசை கூட அவரால் முறியடிக்க முடியவில்லை.

எல்லாமே பெனோய்ட் பேருக்கு சாதகமாக அமைய ஒரு மணி நேரத்தில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். பெனோய்ட் பேர் 6–3, 6–0 என்ற நேர் செட் கணக்கில் பெடேனை வீழ்த்தி சென்னை ஓபனில் 3–வது முறையாக அரைஇறுதியை எட்டினார்.

இந்திய ஜோடி
மற்ற ஆட்டங்களில் இஸ்ரேலின் துடி செலா 7–5, 6–4 என்ற செட் கணக்கில் அல்பெர்ட் ரமோஸ்– வினோலசையும் (ஸ்பெயின்), ரஷியாவின் டேனில் மெட்விதேவ் 6–1, 6–4 என்ற நேர் செட்டில் ஜோஸிப் கோவலிக்கையும் (சுலோவக்கியா) பந்தாடினர். 2–வது சுற்றில் முன்னாள் சாம்பியன் மரின் சிலிச்சுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த கோவலிக், கால்இறுதியில் எந்தவித எதிர்ப்பும் இன்றி பணிந்து போனது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

இரட்டையர் பிரிவின் அரைஇறுதியில் இந்தியாவின் புராவ் ராஜா– திவிஜ் சரண் ஜோடி 6–4, 6–2 என்ற நேர் கணக்கில் அர்ஜென்டினாவின் குல்லர்மோ டுரான்– ஆன்ட்ரியாஸ் மோல்டெனி இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

நன்றி் : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.