Breaking News
தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை நீடிப்பு; ஐகோர்ட்டு உத்தரவு

தமிழகத்தில் விவசாய நிலங்கள் அதிக அளவில் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் அவை அங்கீகாரம் செய்யப்படாமல் விற்பனை செய்யப்படுவதாக புகார் கூறப்பட்டது.

வழக்கு
இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘தமிழகத்தில் கடந்த 2001–ம் ஆண்டு இருந்த 69 சதவீத விவசாய நிலங்கள், 2013–ம் ஆண்டு 58 சதவீதமாக குறைந்துவிட்டது. இந்த 11 சதவீத விளை நிலங்கள் எல்லாம் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளாக மாறியுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 25 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. எனவே, விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு தடைவிதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் கடந்த ஆண்டு செப்டம்பர் 9–ந் தேதி விசாரித்து, விளை நிலங்களை அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்யும்போது, அந்த நிலங்களை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று பத்திரப்பதிவுத்துறைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

அரசாணை தாக்கல்
இந்த வழக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 21–ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெரனல், தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டம், பிரிவு 22–ஏ– வின்படி கடந்த ஆண்டு அக்டோபர் 20–ந் தேதி பிறப்பிக்கப்பட்ட ஒரு அரசாணையை தாக்கல் செய்தார்.

அதில், ‘அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்படுகிறது. அதேநேரம், இந்த அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பு, அதாவது அக்டோபர் 20–ந் தேதிக்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட மனைகளை, மறு பத்திரப்பதிவு செய்ய விலக்கு அளிக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த அரசாணையை படித்த நீதிபதிகள், ‘தமிழகத்தில் நிலங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன? அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை எவ்வாறு வரையறை செய்யப்போகிறீர்கள்? என்பதை முதலில் அரசு தெளிவுப்படுத்தவேண்டும்’ என்றும் அது தொடர்பான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

கையகப்படுத்தலாம்
அதேநேரம், பத்திரப்பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீடித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தநிலையில், மனுதாரர் யானை ராஜேந்திரன் கூடுதலாக ஒரு மனுவை தற்போது தாக்கல் செய்துள்ளார்.

அதில், முறையாக சட்டப்படி வீட்டுமனைகளை உருவாக்கவேண்டும் என்றால், ஒரு ஏக்கர் நிலத்துக்கு ரூ.20 லட்சம் செலவு செய்யவேண்டும். அதை செய்யாமல், முறைகேடாக வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம் பெற்று விடுகின்றனர். எனவே, முறைகேடாக வீட்டு மனைகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும். மேலும், விளைநிலங்கள் எந்த ஒரு காரணமும் இல்லாமல், விவசாயம் செய்யப்படாமல் தரிசு நிலமாக கிடந்தால், அந்த நிலத்தை அரசு கையகப்படுத்திக் கொள்ளலாம் என்று உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

கால அவகாசம்
இந்தநிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் உள்ள நிலங்களை எவ்வாறு வகைப்படுத்துவது? அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை எவ்வாறு வரையறை செய்வது? என்பது குறித்து பதில் மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.

இதற்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினார்கள். அப்போது ஒரு வக்கீல் எழுந்து, ‘பல அடுக்குகளை கொண்ட மாடி வீடுகளை என் கட்சிக்காரர் கட்டியுள்ளார். பத்திரப்பதிவுக்கு தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால், இந்த வீடுகள் எல்லாம் விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ளது’ என்று வாதிட்டார்.

சட்டத்தை வளைக்க வேண்டுமா?
அதற்கு நீதிபதிகள், ‘அந்த வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலம் அங்கீகாரம் பெற்ற வீட்டுமனையா?’ என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு, அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை என்று வக்கீல் ஒப்புக் கொண்டார்.

இதற்கு, ‘இப்படி விளைநிலங்களில் எல்லாம் கட்டிடங்கள் கட்டினால் விவசாயம் என்ன ஆகும்? நாளை உணவுக்கு என்ன செய்வீர்கள்?‘ என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

அப்போது மற்றொரு வக்கீல் எழுந்து, ‘ஐகோர்ட்டு விதித்த தடை உத்தரவினால், நிலங்களை விற்பனை செய்ய முடியாமல் இருவர் இறந்துள்ளனர்’ என்று கூறினார்.

அதற்கு நீதிபதிகள், ‘நிலத்தை வாங்கும்போது அது எந்த வகையானது? என்பதை முதலில் சரிபார்க்கவேண்டும். அது அவர்களின் கடமை. அதை செய்யாமல், இதுபோன்ற குற்றச்சாட்டை சுமத்தக்கூடாது. இவர்களுக்காக சட்டத்தை வளைக்க வேண்டும் என்கிறீர்களா?’ என்று கேள்வி எழுப்பினர்.

தடை நீடிக்கும்
அப்போது மனுதாரர் யானை ராஜேந்திரன் எழுந்து, ‘இந்த ஐகோர்ட்டு தடை விதித்ததால் தான், 2 முதல் 3 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் காப்பாற்றப்பட்டது. மத்திய அரசு 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அண்மையில் அறிவித்தது. இந்த பணத்தை மாற்ற காலஅவகாசமும் வழங்கியது. இந்த காலஅவகாசத்தின்போது, கருப்பு பணம் வைத்திருப்பவர்கள், அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளாக உள்ள விவசாய நிலத்தை தான் வாங்கி குவித்து இருப்பார்கள். ஐகோர்ட்டின் தடை உத்தரவினால், இந்த நிலங்கள் எல்லாம் தப்பியது’ என்று கூறினார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை 30–ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அதுவரை அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீடித்து உத்தரவிட்டனர்.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.