Breaking News
ராணுவ வீரர்கள் மீது லாரியை ஏற்றி கொன்றவர் ஐ.எஸ். ஆதரவாளர் இஸ்ரேல் பிரதமர் தகவல்

இஸ்ரேல்–பாலஸ்தீனம் இடையே ஆண்டாண்டு காலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இஸ்ரேலியர்களை பாலஸ்தீனியர்கள் கார்களை கொண்டு மோதுவதும், கத்தியால் வெட்டி தாக்குவதும், அப்படி தாக்குதலில் ஈடுபடுபவர்களை இஸ்ரேலிய ராணுவத்தினர் சுட்டுக்கொல்வதும் வாடிக்கையாகி விட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெருசலேம் நகருக்கு வந்த ராணுவ வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பஸ்களில் இருந்து இறங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிவேகமாக லாரியை ஓட்டி வந்த மர்மநபர் ஒருவர் லாரியை ராணுவத்தினர் கூட்டத்துக்குள் புகுத்தினார்.

இந்த கோர சம்பவத்தில் 3 வீராங்கனைகளும், வீரர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து ராணுவ வீரர்கள் லாரி டிரைவரை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். தாக்குதல் நடத்திய நபர் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஜபல் முகாபர் (வயது 28) என அடையாளம் காணப்பட்டார்.

இதற்கிடையே தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததும் பிரதமர் பெஞ்சமின் நேட்டன் யாஹூ சம்பவ இடத்துக்கு விரைந்து நிலைமையை ஆய்வு செய்தார். அப்போது அவர் தாக்குதல் நடத்திய நபர் ஐ.எஸ். இயக்கத்தின் ஆதரவாளர் என்பதை உறுதிபட தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.