Breaking News
தனுஷ் ஜோடியாக நடித்தவர் நடிகை பாருல்யாதவை தெரு நாய்கள் கடித்து குதறின

கன்னட பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் பாருல்யாதவ். இவர் தமிழில் தனுஷ் ஜோடியாக ‘ட்ரீம்ஸ்’ படத்தில் நடித்து இருக்கிறார். புலன் விசாரணை இரண்டாம் பாகத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாள படங்களிலும் நடித்துள்ளார். ராம்கோபால் வர்மா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான வீரப்பன் வாழ்க்கை கதை படத்தில் அதிரடிப்படையினருக்கு வீரப்பனை காட்டிக்கொடுக்கும் உளவாளி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

பாருல்யாதவ் குடும்பத்தினருடன் மும்பையில் வசிக்கிறார். இவர் வெளிநாட்டு உயர்வகை நாய் ஒன்றை வீட்டில் வளர்த்து வருகிறார். அந்த நாயுடன் தினமும் நடைபயிற்சி செய்வது உண்டு. வழக்கம் போல் வீட்டின் அருகில் நாயுடன் அவர் நடைபயிற்சி சென்று கொண்டு இருந்தார்.

6 நாய்கள் கடித்தன

சிறிது தூரம் சென்றதும் அவரது நாயை 6 தெருநாய்கள் சுற்றிவளைத்து கடித்தன. அவற்றிடம் இருந்து நாயை காப்பாற்ற பாருல்யாதவ் போராடினார். தெருநாய்களை விரட்ட முயன்றார். இதனால் அந்த 6 நாய்களும் பாருல்யாதவ் மீது பாய்ந்தன. அவரை கை, கால், கழுத்து, முகம், தலை பகுதிகளில் ஆவேசமாக கடித்து குதறின. ரத்தம் கொட்டியது.

வலி தாங்காமல் பாருல்யாதவ் அலறினார். பக்கத்து அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த ஒருவர் கம்புடன் ஓடிவந்து நாய்களை விரட்டினார். பாருல்யாதவ் உடனடியாக அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தலையில் ஆழமாக நாய்களின் பற்கள் பதிந்து இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

காப்பாற்றவில்லை

பாருல்யாதவ் சகோதரி சீட்டல் கூறும்போது, “நாய் கடித்தபோது நிறைய பேர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தனர்.

ஆனால் யாரும் பாருல் யாதவை காப்பாற்ற முன்வரவில்லை. இது வருத்தம் அளிக்கிறது. அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர்தான் ஓடிச்சென்று நாய்களை விரட்டி இருக்கிறார்” என்றார்.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.