Breaking News
7 நாட்டினர் அமெரிக்கா வர தடையை நீக்கியது கோர்ட்டு ஜனாதிபதி டிரம்ப் மேல்–முறையீடு 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும்

7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா வர அனுமதி மறுக்கப்பட்டதற்கு, நாடு முழுவதும் தடை விதித்து, சியாட்டில் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதை எதிர்த்து டிரம்ப் மேல்–முறையீடு செய்துள்ளார். இதை 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும்.

கோர்ட்டு தடை
ஈரான், ஈராக், சிரியா, லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்த பயணிகள் 3 மாத காலம் அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுத்து, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த 20–ந் தேதி உத்தரவிட்டார். இதனால் அந்த நாடுகளை சேர்ந்த 60 ஆயிரம் பேரின் விசாக்கள் ரத்தாகின.

உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த உத்தரவை எதிர்த்து வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட அமெரிக்க நகரங்களில் மட்டுமல்லாது, லண்டன், பாரீஸ் என பிற நாட்டு நகரங்களிலும் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதற்கு இடையே டிரம்பின் உத்தரவை எதிர்த்து சியாட்டில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜேம்ஸ் ராபர்ட், டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு நாடு முழுவதும் தற்காலிக தடை விதித்தார்.

டிரம்ப் விமர்சனம்
நீதிபதி ஜேம்ஸ் ராபர்ட், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யு புஷ் காலத்தில் நியமிக்கப்பட்டவர்.

தனது உத்தரவுக்கு எதிராக நாடு முழுவதும் நீதிபதி ஜேம்ஸ் ராபர்ட் தடை விதித்ததால் டிரம்ப் கொதித்தெழுந்தார். அவர் அந்த தீர்ப்பை டுவிட்டரில் சாடி கருத்துக்கள் வெளியிட்டார்.

குறிப்பாக நீதிபதி ஜேம்ஸ் ராபர்ட் பெயரளவுக்குத்தான் நீதிபதி என்றும், அவரது தீர்ப்பு நகைப்புக்கு இடம் அளிக்கக்கூடிய ஒன்று என்றும், அந்த தீர்ப்பு முறியடிக்கப்படும் என்றும் அவர் சாடினார்.

இருப்பினும் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து, தடை விதிக்கப்பட்ட 7 நாடுகளை சேர்ந்தவர்கள் செல்லத்தக்க விசாக்கள் இருந்தால், அமெரிக்கா வர அனுமதி அளித்து, வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

மேல்–முறையீடு
இந்த நிலையில் சியாட்டில் கோர்ட்டு நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக 9–வது மேல்–முறையீடு சர்க்கியூட் கோர்ட்டில் நேற்று டிரம்ப் சார்பில் மேல்–முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் வில்லியம் கேன்பி, ரிச்சர்ட் கிளிப்டன், மிச்செல்லி பிரைட்லேண்ட் ஆகிய 3 பேரை கொண்ட அமர்வு விசாரிக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

இவர்களில் வில்லியம் கேன்பி முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டராலும், ரிச்சர்ட் கிளிப்டன் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யு புஷ்சாலும், மிச்செல்லி பிரைட்லேண்ட் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவாலும் நியமிக்கப்பட்டவர்கள்.

‘வெற்றி பெறுவோம்’
மேல்–முறையீட்டு வழக்கில் வழக்குதாரராக டிரம்ப், உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி ஜான் கெல்லி, வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

மேல்–முறையீடு குறித்து டிரம்ப் கருத்து தெரிவிக்கையில், ‘‘நாங்கள் வெற்றி பெறுவோம். நாட்டின் பாதுகாப்புக்காக நாங்கள் வெற்றி பெறுவோம்’’ என குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்துக்கும், நீதித்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட தொடங்கி உள்ளதாக கருத்து எழுந்துள்ளது.

இதுபற்றி அமெரிக்க அரசியல் சட்ட நிபுணர் மார்சி ஹேமில்டன் கூறும்போது, ‘‘இது ஜனாதிபதிக்கும், அரசியல் சாகனத்துக்கும் இடையேயான காவிய மோதல்’’ என குறிப்பிட்டார்.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.