Breaking News
இஸ்ரோவின் புதிய உலக சாதனை முயற்சி: 104 செயற்கைக் கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி – சி 37

பிஎஸ்எல்வி – சி 37 ராக்கெட் 104 செயற்கைக் கோள்களுடன் இன்று காலை விண்ணில் பாய் கிறது. ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்படுவதன் மூலம், ரஷ்யாவின் தற்போதைய சாதனை முறியடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), செயற்கைக் கோள்களையும், அவற்றை விண் ணில் செலுத்தப் பயன்படும் ராக்கெட்களையும் தயாரித்து வருகிறது. உள்நாட்டு செயற்கைக் கோள்கள் மட்டுமல்லாமல் வர்த்தக நோக்கில் வெளிநாடுகளின் செயற் கைக் கோள்களையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த 1994 முதல் 2016-ம் ஆண்டு வரை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்கள் மூலமாக 42 இந்திய செயற்கைக் கோள்கள், 79 வெளிநாட்டு செயற் கைக் கோள்கள் என மொத்தம் 121 செயற்கைக் கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளன.

காலை 9.28 மணிக்கு..

பிஎஸ்எல்வி – சி37 ராக்கெட் மூலம் 104 செயற்கைக் கோள்கள் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) காலை 9.28 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இதற்கான 48 மணி நேர கவுன்ட் டவுன் திங்கள்கிழமை காலை 9.28 மணிக்கு தொடங்கியது.

இந்தியாவின் கார்டோசாட்-2 செயற்கைக் கோள், ஐஎன்எஸ்-1ஏ, ஐஎன்எஸ் 1-பி என 2 நானோ செயற்கைக் கோள்கள், இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்குச் சொந்தமான 5 நானோ செயற்கைக் கோள், அமெரிக்காவின் 96 நானோ செயற்கைக் கோள்கள் என மொத்தம் 104 செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி ராக்கெட் சுமந்து செல்கிறது.

கார்டோசாட்-2 செயற்கைக் கோளின் எடை 714 கிலோ. ஒவ் வொரு நானோ செயற்கைக் கோளும் 5 முதல் 10 கிலோ வரை எடை கொண்டது. இந்த செயற்கைக் கோள்கள் அனைத்தும் பூமியில் இருந்து 505 கி.மீ. தொலைவில் புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும்.

கார்டோசாட்-2 செயற்கைக் கோள் அனுப்புகிற படங்கள் வரை படப் பயன்பாடு, நகர்ப்புற, ஊரகப் பகுதிகளின் பயன்பாடு, கடலோரப் பகுதி பயன்பாடு, சாலை இணைப்பு கண்காணிப்பு, நீர் விநியோகம், தரை பயன்பாட்டு வரைபடங்கள் உள்ளிட்டவற்றுக்கும் புவியியல் சார்ந்த அம்சங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிவதற் கும் பெரிதும் உதவிகரமாகவும், சிறப்புக்குரியதாகவும் இருக்கும்.

இஸ்ரோ இதற்கு முன்பு ஒரே நேரத்தில் 20 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி யதுதான் அதிகபட்சமாக இருந் தது. ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படுவது இஸ்ரோ வரலாற்றில் இது முதல்முறை.

இதுவரை அதிகபட்சமாக 37 செயற்கைக் கோள்களை ரஷ்யா ஏவியதுதான் உலக சாதனையாக இருக்கிறது.

தற்போது 104 செயற்கைக் கோள்களை இஸ்ரோ விண்ணில் வெற்றிகரமாக செலுத்துவதன் மூலம், ரஷ்யாவின் சாதனை முறியடிக்கப்படுகிறது. அதோடு இது புதிய உலக சாதனையாக இருக்கும் என்பதும் குறிப்பிடத் தக்கது.

நன்றி : தி இந்து தமிழ்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.