Breaking News
500 மதுக்கடைகள் மூடப்படும்; முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்

தமிழக முதல்- அமைச்சராக பதவி ஏற்ற எடப்பாடி பழனிசாமி, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் தனது அரசுக்கு இருக்கும் மெஜாரிட்டியை நிரூபித்தார்.

பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும், மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்பன உள்ளிட்ட 5 முக்கிய திட்டங்களை நிறைவேற்ற வகை செய்யும் 5 கோப்புகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டார்.

எடப்பாடி பழனிசாமி

இதைத்தொடர்ந்து, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்துக்கு சென்றார். அவருக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்திய அறைக்கு சென்றார். அங்கு ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி விட்டு, ஜெயலலிதா பயன்படுத்திய நாற்காலியில் அமர்ந்தார்.

5 கோப்புகளில் கையெழுத்து

பின்னர் அவர், தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா வாக்குறுதி அளித்த 5 முக்கிய திட்டங்களை நிறைவேற்றும் வகையில், 5 கோப்புகளில் கையெழுத்திட்டு, தனது பணிகளை தொடங்கினார்.

அவர் கையெழுத்திட்ட 5 திட்டங்கள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மானிய விலையில் இரு சக்கர வாகனம்

* மகளிர், பணியிடங்களுக்கும் பிற வேலைகளுக்கும் எளிதில் செல்லும் வகையில் இரு சக்கரவாகனங்கள் வாங்க 50 சதவீத மானியம் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் உழைக்கும் மகளிருக்கு இரு சக்கரவாகனம் வாங்க 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் இருபதாயிரம் வழங்கப்படும்.

மகளிரின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை வைத்திருந்த ஜெயலலிதா நினைவாக இத்திட்டம் ‘அம்மா இரு சக்கர வாகனம் திட்டம்’ என அழைக்கப்படும். ஆண்டொன்றுக்கு சுமார் 200 கோடி ரூபாய் செலவில் இத்திட்டத்தினை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும்.

கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.18 ஆயிரம்

* ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவியை, 1.6.2011 முதல் 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க ஜெயலலிதா ஆணையிட்டார். உலகநாடுகளின் நிலையையொத்த பேறுகால குறியீடுகளை தமிழ்நாடு அடையும் பொருட்டும், பேறுகால தாய்-சேய் இறப்பு விகிதத்தினை மேலும் குறைக்கும் பொருட்டும், 2016-ம் ஆண்டு சட்டமன்றதேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி 12 ஆயிரம் ரூபாயில் இருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதனை நிறைவேற்றும் வகையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி 12 ஆயிரம் ரூபாயில் இருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 6 லட்சம் தாய்மார்கள் பயன் அடைவர். ஆண்டொன்றுக்கு 360 கோடி ரூபாய் கூடுதல் செலவில் இத்திட்டத்தினை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும்.

வீடு கட்டும் திட்டம்

* தேர்தல் அறிக்கையில், ஜெயலலிதா மீனவர்களுக்கென தனியே வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதிலும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து முனைப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் மீனவர்களுக்கான தனி வீட்டு வசதி திட்டத்தை செயல்படுத்த ஆணையிட்டு அதற்கான கோப்பில் முதல்- அமைச்சர் கையெழுத்திட்டார்.

இத்திட்டத்தின் கீழ் 5000 வீடுகள் கட்டப்படும். ஒரு வீட்டின் மதிப்பு 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஆகும். 85 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.600

* வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை இரு மடங்காக அதிகரிக்கப்படும் என ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் அறிவித்து இருந்தார்.

மேற்கண்ட தேர்தல் வாக்குறுதியை நடைமுறைப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத இளைஞர்களுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித் தொகையை ரூ.100-லிருந்து ரூ.200 ஆக உயர்த்தியும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித் தொகையை ரூ.150-லிருந்து ரூ.300 ஆக உயர்த்தியும், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத இளைஞர்களுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.200-லிருந்து ரூ.400 ஆக உயர்த்தியும், பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.300-லிருந்து ரூ.600 ஆக உயர்த்தியும் ஆணையிட்டு அதற்குரிய கோப்பில் முதல்- அமைச்சர் கையெழுத்திட்டார்.

இத்திட்டத்தின் மூலம் தற்போது உதவித்தொகை பெற்றுவரும் 55,228 இளைஞர்கள் உயர்த்தப்பட்ட உதவித்தொகை பெற்று பயன் பெறுவர். இத்திட்டத்தை செயல்படுத்துவதனால் தமிழ்நாடு அரசுக்கு ஆண்டொன்றுக்கு 31 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும்.

மேலும் 500 மதுக்கடைகள்

* மது விலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மது விலக்கு என்ற நிலை எய்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஜெயலலிதா 500 மதுபான கடைகளை மூடியும், மதுபான கடைகள் திறந்திருக்கும் நேரத்தை குறைத்தும் 24.5.2016 அன்று ஆணையிட்டார்.

மேற்கண்ட கொள்கையினை முன்னெடுத்து செல்லும் வகையில், தமிழ்நாட்டில் மேலும் 500 மதுபான கடைகள் மூடுவதற்கான ஆணையிட்டு, அதை செயல்படுத்தும் வகையில் அக்கோப்பில் முதல்-அமைச்சர் கையெழுத்திட்டார். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேற்கண்ட 5 திட்டங்களை நிறைவேற்றுவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.