Breaking News
திருச்செந்தூர் அருகே கடலில் படகு கவிழ்ந்து பயங்கரம்: சுற்றுலா பயணிகள் 9 பேர் பலி: 20 பேர் மீட்பு; சிறுமியை தேடும் பணி தீவிரம்

திருச்செந்தூர் அருகே மணப்பாட்டில் சுற்றுலா சென்றவர்கள் படகு கடலில் மூழ்கியதில் 9 பேர் பரிதாபமாக பலியாகினர். 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்களில் 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு சிறுமியை மட்டும் தொடர்ந்து தேடி வருகின்றனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கிராமங்களில் உள்ள குலதெய்வ கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். வெளியூர்களில் வசிக்கும் பலரும் இவ்விழாவை முன்னிட்டு சொந்த கிராமங்களுக்கு வந்து திருவிழாவில் பங்கேற்பது வழக்கம். இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே படுக்கப்பத்து அழகம்மன்புரத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் கடந்த 24ம் தேதி மகாசிவராத்திரி விழா துவங்கி 3 நாட்கள் விமரிசையாக நடந்தது. இந்த விழாவில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூரில் வசிக்கும் அழகம்மன்புரத்தைச் சேர்ந்தவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

நேற்றுடன் விழா முடிவடைந்ததையடுத்து மதியம் கிடா வெட்டி கறி விருந்து சாப்பிட்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பின்னர் சுற்றுலாவாக திருச்செந்தூர் அருகேயுள்ள மணப்பாடு செல்ல முடிவெடுத்தனர். இதற்காக 4 டிரக்கர் மற்றும் 4 பைக்குகளில் சிறுவர், சிறுமிகள், பெண்கள் உள்பட சுமார் 40க்கும் மேற்பட்டோர் மணப்பாடு சென்றனர். அங்குள்ள கடற்கரையை ரசித்துப் பார்த்த அவர்களுக்கு திடீரென கடலுக்குள் படகில் செல்ல வேண்டுமென ஆசை ஏற்பட்டது. இதையடுத்து மணப்பாட்டை சேர்ந்த செல்வம் என்பவரை அணுகினர். கடலுக்குள் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்ல அவர் முதலில் மறுத்துள்ளார். ஆனால் சுற்றுலா வந்தவர்கள் தொடர்ந்து அவருக்கு அழுத்தம் தரவே வேறு வழியின்றி மாலை 6 மணியளவில் அவர்களை கடலுக்குள் படகில் அழைத்துச் செல்ல சம்மதித்தார்.

சாத்தூரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் திருச்சி துவாக்குடியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரும் தனது மனைவி சுகன்யாவுடன் மணப்பாட்டுக்கு சுற்றுலா வந்திருந்தார். அவர்களும் அழகம்மன்புரத்தைச் சேர்ந்தவர்களுடன் கடலுக்குள் படகில் செல்ல ஆசைப்பட்டனர். இதையடுத்து கார்த்திகேயன், அவரது மனைவி சுகன்யா ஆகியோரையும் அழைத்துக் கொண்டு அழகம்மன்புரத்தைச் சேர்ந்தவர்கள் செல்வத்தின் பைபர் படகில் கடலுக்குள் சென்றனர். படகில் சுமார் 30 பேர் இருந்தனர். படகு கரையிலிருந்து புறப்பட்டு அரை கி.மீ. தூரம் சென்றபோது ஒரு ராட்சத அலை பயங்கரமாக மோதியது. அளவுக்கு அதிகமானோர்
இருந்ததால் நிலை தடுமாறிய படகு கடலில் கவிழ்ந்தது.

இதில் படகில் இருந்த அனைவரும் கடலுக்குள் மூழ்கினர். கரையில் நின்று கொண்டிருந்த மீனவர்கள் இதைக்கண்டு உடனடியாக தங்களது படகுகளில் விரைந்து சென்று, அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீரில் தத்தளித்த கார்த்திகேயனும் சிலரை மீட்டார். அழகம்மன்புரத்தை சேர்ந்த ஆறுமுககொடி மனைவி உஷா, சுந்தர்ராஜ் மனைவி முருகேஸ்வரி, அழகேசன் மகள் முத்துச்செல்வி, ஆறுமுக கொடி மகன் சுந்தரேசன், மார்க்கண்டேயன் மகன் ஜெயராமன், ஜெயராமன் மனைவி முத்துலட்சுமி, சுந்தர்ராஜின் 8 வயது மகன், மற்றும் ஒருவர் என 8 பேரும், திருச்சியைச் சேர்ந்த சுகன்யாவும் உயிரிழந்தனர். 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இவர்களில் சந்திரசேகர் மகள்கள் சிவகார்த்திகா (16), சிவரஞ்சனி (17), மீனாட்சிசுந்தரி (20), தினேஷ் மனைவி கவிதா (23), வரதன் மகன் திலிப் (9), ஜெயராமன் மகன் சந்தோஷ் (9) ஆகிய 6 பேர் திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சந்திரசேகரின் மற்றொரு மகள் சிறுமி எபி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரை தேடி வருகின்றனர்.சம்பவம் குறித்து தகவலறிந்த தூத்துக்குடி கலெக்டர் ரவிக்குமார், எஸ்பி அஸ்வின் கோட்னீஸ், அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ உள்பட பலர் மணப்பாட்டில் குவிந்தனர். மீட்பு பணிகளை துரிதப்படுத்திய அவர்கள் திருச்செந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த சம்பவம் அழகம்மன்புரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சடலத்தை மீட்க வலை விரிப்பு
பைபர் படகில் சுமார் 30 பேர் சென்றதாக கூறப்படுகிறது. இதில், 20 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு வரை கடலோர காவல்படையினர், மீனவர்கள் உதவியுடன் தேடும் பணி நடந்தது. இரவு 10 மணியை கடந்து விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இருப்பினும் கடல் நீரோட்டத்தில் உடல்கள் எதுவும் ஆழ்கடல் பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டு விடக்கூடாது என்பதற்காக படகு கவிழ்ந்த பகுதியில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை மீனவர்கள் உதவியுடன் வலையை விரித்து வைத்துள்ளனர்.

தமிழகத்தை உலுக்கிய படகு விபத்துகள்
ஜூலை 23, 2000- மாமல்லபுரத்துக்கு சுற்றுலா சென்ற சென்னை இணையதள நிறுவன ஊழியர்கள் கடலில் படகு சவாரி செய்தனர். படகு திடீரென கவிழ்ந்ததில் 4 பெண்கள் உட்பட 5 பேர் பலியாகினர். டிசம்பர் 25, 2011- சென்னை அருகே வங்க கடல் முகத்துவாரத்தில் பழவேற்காடு ஏரியில் கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தன்று படகில் உல்லாச பயணம் மேற்கொண்ட 22 பேர் பலியானார்கள். இவர்களில் 21 பேர் ஒரே குடும்பத்தினர்.
ஆகஸ்ட் 30, 2015- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் சவாரி செய்த சென்னையை சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விளையாட்டு ரத்தானது விபரீதத்தில் முடிந்தது
அழகம்மன்புரம் கிராமத்தில் மகா சிவராத்திரி விழாவின் 3 வது நாளன்று விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இளைஞர்கள் அனைவரும் விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டாம். அதற்கு பதில் அருகிலுள்ள பகுதிக்கு சுற்றுலா செல்லலாம் என்று அழைத்தனர். இதையடுத்து போட்டிகளை ரத்து செய்து விட்டு அனைவரும் சுற்றுலாவாக மணப்பாடு புறப்பட்டுச் சென்றனர். அங்கு நடந்த விபத்தில்தான் ஒரே கிராமத்தை சேர்ந்த 8 பேர் இறந்தனர்.

தேடும் பணி தீவிரம்
தூத்துக்குடி கலெக்டர் ரவிக்குமார் கூறுகையில், ‘‘மணப்பாடு கடலில் மூழ்கிய 9 பேர் பலியாகி உள்ளனர். அனுமதியின்றியும், பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமலும் கடலுக்குள் படகில் சென்றுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆர்டிஒ தியாகராஜன், தாசில்தார் செந்தூர்ராஜன் ஆகியோர் மேற்பார்வையில் கடலுக்குள் யாரும் சிக்கியுள்ளார்களா என தேடும் பணி நடக்கிறது. இப்பணியில் கடலோர காவல் படையினரும் உள்ளூர் மீனவர்களும் பங்கேற்றுள்ளனர். இதுதொடர்பாக படகின் உரிமையாளர் செல்வத்திடம் விசாரணை நடந்து வருகிறது’’ என்றார். நன்றி:தினகரன்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.