Breaking News
டெஸ்ட்: இந்தியா சிறப்பான பந்துவீச்சு!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இன்று தொடங்கியது.

முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி கண்ட இந்திய அணி, 2-ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி கண்டதன் மூலம் நம்பிக்கை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் ராஞ்சியில் நடைபெறும் 3-ஆவது போட்டியில் வெல்வதில் இந்திய அணி தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணியும் இந்தப் போட்டியில் வெல்லும் முனைப்பில் உள்ளது. 2-ஆவது டெஸ்ட் போட்டியில் டிஆர்எஸ் விவகாரத்தில் மோதல் ஏற்பட்டதால், இந்தப் போட்டியில் இரு அணிகளும் ஆக்ரோஷமாக ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ், மேக்ஸ்வெல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்திய அணியில் முகுந்துக்குப் பதிலாக விஜய் சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடக்க வீரர்களான வார்னரும் ரென்ஷாவும் கடகடவென ரன்கள் எடுக்க ஆரம்பித்தார்கள். 10-வது ஓவரில் 50 ரன்களை எடுத்தார்கள். ஆனால் அதே ஓவரில் பந்துவீசிய ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து 19 ரன்களில் வெளியேறினார் வார்னர். இந்த் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ரென்ஷா 44 ரன்கள் எடுத்த நிலையில் அரை சதத்தைத் தவறவிட்டார். உமேஷ் யாதவ் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதன்பின்னர் ஷேன் மார்ஷ், புஜாராவின் அற்புதமாக கேட்சினால் இரண்டே ரன்களில் பெவிலியன் திரும்பினார். அஸ்வின் இந்த விக்கெட்டை வீழ்த்தினார்.

டாஸ் வென்றபிறகும் அதைச் சரியாகப் பயன்படுத்தாமல் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை முதல் நாளின் முதல் பகுதியில் இழந்துள்ளது. உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 30 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.