Breaking News
கோடை விடுமுறையில் ஆசிரியர்களுக்கு தடை

பள்ளி ஆசிரியர்கள், கோடை விடுமுறையில் வெளியூர் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், நடப்பாண்டு பொதுத்தேர்வு, முன்கூட்டியே துவங்கி விட்டது; விடைத்தாள் திருத்தும் பணிகளையும், ஏப்., மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வு, ஏப்., 29 மற்றும் 30ல் நடக்கிறது. எனவே, மே மாதத்தில் கோடை விடுமுறையை கொண்டாட ஆசிரியர்கள் பலரும் திட்டமிட்டிருந்தனர். அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, ‘கோடை விடுமுறையில் வெளியூர் செல்லக்கூடாது’ என்று, மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘மே மாதம், உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதால், கோடை விடுமுறையில், ஆசிரியர்கள் தலைமையிடத்தை விட்டு எக்காரணம் கொண்டும், அனுமதி பெறாமல் செல்லக்கூடாது. வருவாய் துறையினரால் வழங்கப்படும் பணி ஆணைகளை பெற்று, பணிபுரிய வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பொதுத்தேர்வு நடப்பதால், தேர்தல் ஆணைய சுற்றறிக்கையை, பள்ளிகளுக்கு தெரியப்படுத்தவில்லை. தேர்வுகள் முடிந்ததும், தலைமையாசிரியர்கள் மூலம் அறிவுறுத்த திட்டமிட்டுள்ளோம்,’ என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.