Breaking News
‘டோரா’வுக்கு ‘ஏ’ சான்றிதழ்: தணிக்கைக் குழுவை கிண்டல் செய்த விக்னேஷ் சிவன்

தமிழ் படங்களுக்கு தணிக்கை செய்யும் குழுவை தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

சற்குணம் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரா’. புதுமுக இயக்குநர் தாஸ் ராமசாமி இயக்கியுள்ள இப்படத்தில் தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறார் ஜபக்.

‘டோரா’ படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியதால் படக்குழு அதிர்ச்சியடைந்தது. மேலும், ஆரோ சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை மார்ச் 31-ம் தேதி வெளியிடவுள்ளது.

இந்நிலையில் தணிக்கை குழுவினரை தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். “டோரா – ‘ஏ’ சான்றிதழ், மாநகரம் – ‘யு/ஏ’ சான்றிதழ் மற்றும் ‘துருவங்கள் 16’ – ‘யு/ஏ’ சான்றிதழ். ஆனால் சில படங்களுக்கு ‘யு’ சான்றிதழை அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார்கள். நாளுக்கு நாள் நமது தணிக்கைக் குழு மீதான காதல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

தற்போது சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.