Breaking News
டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய அணி 2-0 என முன்னிலை

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், உஸ்பெகிஸ்தான் வீரர் டெமூர் இஸ்மெயிலோவை வீழ்த்தினார்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசிய-ஓசியானா குரூப்-1 இரண்டாவது சுற்றில் இந்தியா – உஸ்பெகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் நேற்று பெங்களூருவில் தொடங்கியது. முதல் நாளில் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றது.

முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் ராம் குமார் ராமநாதன், உஸ்பெகிஸ்தானின் டெமூர் இஸ்மெயிலோவை எதிர்த்து விளையாடினார். இதில் ராம்குமார் 6-2, 5-7, 6-2 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 3 மணி நேரம் 14 நிமிடங்கள் நடைபெற்றது.

இதையடுத்து நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஷ்வரன், உஸ்பெகிஸ்தானின் சஞ்சார் பைஸிவ்வை எதிர்த்து விளையாடினார். இதில் குணேஷ்வரன் 7-5, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 24 நிமிடங்கள் நடைபெற்றது. இந்த வெற்றிகளின் மூலம் இந்திய அணி 2-0 என முன்னிலை வகித்தது.

இன்று இரட்டையர் பிரிவு ஆட்டம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் இந்தியா சார்பில் பாலாஜி, ரோகன் போண்ணா ஜோடி களமிறங்கிறது. இதில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி செப்டம்பம் மாதம் நடைபெறும் உலக பிளே ஆப் சுற்றில் விளையாட தகுதி பெறும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.