Breaking News
ஒருவர் பணத்தை வைத்து…. மற்றொருவர் பிணத்தை வைத்து அரசியல்… தமிழிசை பொளேர்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் ஒரு அணியினர் பணத்தை வைத்தும் மற்றொரு அணியினர் பிணத்தை வைத்தும் அரசியல் செய்வதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும் பணத்தையும், பிணத்தையும் வைத்து அரசியல் செய்கின்றனர் என்று தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டினார். ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அதிமுகவின் இரு அணிகளும், திமுகவும் போட்டி போட்டு கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அச்சமயம் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில் தினகரன் தரப்பினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க கோடிக்கணக்கிலான பணத்தை செலவிடுவதாக ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. வாக்குக்கு ரூ.7000 வரை வழங்கப்படுவதாக தெரிகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் ஜெயலலிதாவின் சவப்பெட்டி போன்று மாதிரியை தயாரித்து ஓபிஎஸ் அணியினர் கடந்த வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தவுடன் அச்செயலை ஓபிஎஸ் தரப்பினர் கைவிட்டனர். பாஜக வேட்பாளர் கங்கை அமரனை ஆதரித்து இன்று ஆர்.கே.நகரில் வீதிவீதியாக தமிழிசை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் தெரிவிக்கையில், அதிமுகவின் ஒரு அணியினர் பணத்தை வைத்து அரசியல் நடத்துகின்றனர், மற்றொரு அணியினர் பிணத்தைக் கொண்டு அரசியல் நடத்துகின்றனர். இந்த இரு அணிகளும் ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்து வருகின்றனர். உண்மையான அதிமுக என்பது ஜெயலலிதா மறைவோடு சென்றுவிட்டது என்றார் தமிழிசை.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.