Breaking News
சற்றும் கலங்காமல் என் கழுத்தை நெரித்தார் நயன்தாரா: ஒரு நடிகரின் திகில் அனுபவம்

சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் படம் டோரா. நயன்தாரா நடித்து வெளிவந்துள்ள இந்த படத்தில் அமானுஷ்ய சக்தி மூலம் பழிவாங்கப் படும் மூன்று வில்லன்களில் ஒருவராக நடித்திருப்பவர் நடிகர் வெற்றி. படத்தில் அவர் பாணிபூரி விற்பவராக வருகிறார்.

சிறு சிறு வேடங்களில் பல படங்களில் நடித்துள்ள இவரை டோரா’ படம்தான் ஒரு முழு வில்லன் முகமாக ‘தண்டோரா’ போட்டுச் சொல்லியிருக்கிறது. திரையரங்கு போய்ப் பார்த்த போதெல்லாம் ‘அவனைக் கழுத்தை நெரிச்சுக் கொல்லு’ என்றும் ‘போட்டுத் தள்ளு’ என்றும் படத்தில் நயன்தாரா பொங்கி எழும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்கள் தன்னை மறந்து ‘அவன் சாகணும் ‘ ,’அவன் சாகணும் ‘ என ஆரவாரிக்கும் போது.. அவை தனக்கு விழுந்த வசவுகள் அல்ல வாழ்த்துகள் என்று புரிந்து கொண்டாராம் வெற்றி.

இது குறித்து அவர் கூறியபோது, எனக்குச் சினிமா மீது ஆசை.ஆர்வம், மோகம் எல்லாமும் உண்டு. வாய்ப்பும் தேட வேண்டும், வயிற்றுக்கும் சோறுவேண்டும் என்று சினிமா சார்ந்து ஏதாவது தொழிலிலும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஏனென்றால் பசியோடு போராடினால் சினிமா என்கிற கலை மீதே வெறுப்பு வந்துவிடும் அல்லவா?

எனக்குச் சிறிதளவு வருமானமும் வர வேண்டும்.நம் நடிப்பு கனவு கலையாமலும் காப்பாற்றப்பட வேண்டும், அப்படிப்பட்ட என்ன தொழிலில் இறங்குவது என்று சினிமாவின் எல்லா கிராப்டையும் பற்றி யோசித்தேன். அப்போது தோன்றிய யோசனைதான் டப்பிங் எனப்படும் குரல் கொடுக்கும் கலை. எனவே டப்பிங் யூனியன் கார்டு வாங்கினேன். நிறைய விளம்பரங்கள், சிறிய படங்கள் ,டிவி தொடர்கள் என்று பேசினேன். மேடை நாடக அனுபவங்களும் உண்டு. “நாளைய இயக்குநர்கள் “சீசன்.- 2 ல் ஏழு குறும்படங்களில் நடித்திருக்கிறேன்.இன்னொரு பக்கம் வாய்ப்பு வேட்டையும் தொடந்தது.

அப்படி வந்த படம்தான். ‘டோரா’ . இது வந்த படம் அல்ல தேடிப் பிடித்து வேட்டையாடிய படம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இயக்குநர் தாஸ்ராமசாமி படத்தில் வரும் பாணிபூரி விற்பவன் பாத்திரத்துக்கு ஆள் தேடுவதாக அறிந்து போய் வாய்ப்பு கேட்டேன். அது வட இந்தியாக்காரன் வேடம் . இந்தி பேச வேண்டும். நீ தமிழன், திராவிடன் முகமே அதற்கு சரிப்பட்டு வராது. என்று தவிர்த்தார் .விரட்டாத குறைக்கு என்னை அனுப்பினார். அடுத்த முறை பார்க்கலாம் என்று அனுப்பி வைத்தார். அப்போது கையில் ஒரு வட இந்தியாக்காரன் போட்டோ வைத்திருந்தார் அதை மனதில் உள்வாங்கிக் கொண்டேன்.

எப்படியாவது இந்த வாய்ப்பைப் பெறுவது என்று தீர்மானித்து சில வேலைகளைச் செய்தேன். முதலில் தாடி மீசை எல்லாம் மழித்துக் கொண்டேன். அசல் பாணிபூரிக்காரன் போடும் டிஷர்ட் பனியன் பார்த்து அது போல வாங்கி மாற்றிக் கொண்டேன்.

ஒரு பாணிபூரிக் கடையில் கெஞ்சி அனுமதி வாங்கி சிலருக்குப் பாணிபூரி போட்டுக் கொடுத்தேன். இதையெல்லாம் நண்பர் மூலம் வீடியோவும் எடுத்துக் கொண்டேன். மறு நாளே இயக்குநரைச் சந்தித்த போது அதே தோற்றத்தில் போனேன்.இந்தியில் பேசினேன். அவர் இதை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் தவிர்க்க முடியவில்லை. ஒருவழியாக சமாதானம் ஆகி.. நீயே நடி என்றார். இப்படி வந்ததுதான். ‘டோரா’

இதில் நான் புதிய நடிகன். ஆனால் பெரிய சூப்பர் ஸ்டாரான நயன்தாரா மேடம் எங்களுடன் எளிமையாகப் பழகினார். எந்த ஈகோவும் இல்லாமல் சகஜமாகப் பேசிப் பழகினார். என்னை அடிக்கும் காட்சியில் கழுத்தைப் பிடித்து நெரிக்கும் காட்சியில் வலிக்கிறதா என்றார். வலித்தால் சொல்லுங்கள் என்றார் அக்கறையாக..அது எனக்கு வியப்பாக,ஊக்கமாக இருந்தது.ஒரு காட்சியில் பாட்டில் தூள்களைப் போட்டு துணியால் அடிப்பது போன்று வரும் .அந்தக் காட்சி. யில் நடிக்கும் போது நிஜமாகவே வலித்தது பொறுத்துக் கொண்டேன். இன்று பலரும் பாராட்டும் போது எல்லாம் மறந்து விடுகிறது. ” என்கிறார் .

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.