Breaking News
பிரமாண வாக்குமூலத்தில் சசி, தினகரன் பெயர் நீடிப்பு

சசிகலா அணி சார்பில், கட்சியினரிடம் பெறப்படும் பிரமாண வாக்குமூலத்தில், சசிகலா மற்றும் தினகரன் பெயர் நீக்கப்படாதது, பன்னீர் அணியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மே தின கூட்டம் :

அ.தி.மு.க., – சசிகலா அணி சார்பில், மாவட்ட செயலர்கள் கூட்டம், மூன்று நாட்களாக, சென்னையில் நடந்தது. தினமும், 15 முதல், 17 மாவட்ட செயலர்கள் வரவழைக்கப்பட்டு, கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு, அவைத் தலைவர் செங்கோட்டையன் தலைமை வகித்தார். முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் முன்னிலை வகித்தனர். அதில், மே தின பொதுக்கூட்டம், எம்.ஜி. ஆர்., நுாற்றாண்டு விழா; இரு அணிகள் இணைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், தேர்தல்கமிஷனில் தாக்கல் செய்வதற்காக, பிரமாண வாக்குமூலத்தில், கையெழுத்து பெறுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஏற்கனவே பெறப்பட்ட பிரமாண வாக்கு மூலத்தில், சசிகலா மற்றும் தினகரன் நியமனத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது, முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள பழனிசாமிக்கும் முழு ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரமாண வாக்குமூலத்தில், முதல்வர் பெயரை சேர்த்தவர்கள், சசிகலா மற்றும் தினகரன் பெயரை நீக்கவில்லை. சசிகலா குடும்பத்தை, கட்சியை விட்டு விலக்குவதாக கூறிய, முதல்வர் மற்றும் அமைச்சர்கள், பிரமாண வாக்குமூலத்தில், அவர்கள் பெயரை நீக்காதது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

நிபந்தனை :

இருதரப்பு பேச்சு துவங்க வேண்டுமானால், சசிகலா குடும்பத்தை, கட்சியை விட்டு விலக்க வேண்டும் என, பன்னீர் அணியினர் நிபந்தனை விதித்துள்ளனர். ஆனால், பிரமாண வாக்குமூலத்தில், சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறி, கட்சியினரிடம் கையெழுத்து பெறுவது, பன்னீர்செல்வம் அணியினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.