Breaking News
உத்தரப் பிரதேசத்தில் மாட்டுக்கு ஆம்புலன்ஸ் அறிமுகம்

காயமடைந்த, நோயுற்ற பசுக்களைக் காக்கும் நோக்கில் உத்தரப் பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சேவையை அம்மாநிலத்தின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுர்யா திங்கட்கிழமை அன்று கொடியசைத்துத் துவங்கி வைத்தார்.

லக்னோவில் உள்ள கேசவ் பிரசாத்தின் அரசு இல்லத்தில் 5 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தன் சேவையைத் தொடங்கின.

இந்த சேவையில், காயமடைந்த, நோயுற்ற பசுக்கள் ஆம்புலன்ஸ் மூலம் கோ சாலைகளுக்கோ, கால்நடை மருத்துவமனைக்கோ அழைத்துச் செல்லப்படும்.

பசு சேவைக்காக டோல் ஃப்ரீ எண்ணும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்களும் அந்த எண்ணை அழைத்து பசுக்களுக்கு உதவ முடியும். ஆம்புலன்ஸில் ஒரு கால்நடை மருத்துவரோடு, ஓர் உதவியாளரும் இருப்பார்.

ஆரம்ப கட்டமாக பசு ஆம்புலன்ஸ் சேவை லக்னோ, கோரக்பூர், வாரணாசி, மதுரா மற்றும் அலகாபாத்தில் செயல்படும்.

அரசுடன் இணைந்து ஆம்புலன்ஸ் சேவையில் ஒரு தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் ராய் கூறும்போது, ”பசு பால் கொடுப்பதை நிறுத்தியவுடன் அவற்றை விரட்டி விடுவோருக்கும், பாலிதீன், பிளாஸ்டிக் கழிவுகளை பசுக்களைக் கொண்டு உண்ணச் செய்யும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்திருக்கிறோம்” என்றார்.

பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்திலும் கார்கோன் என்னும் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்னால் இத்தகைய பசு ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.