Breaking News
பிரபுதேவா – கார்த்திக் சுப்புராஜ் பட அப்டேட்: கன்னட சர்ச்சையால் விலகினார் சம்யுக்தா ஹெக்டே

பிரபுதேவா – கார்த்திக் சுப்புராஜ் இணைந்து பணிபுரிந்து வரும் படத்திலிருந்து விலகியுள்ளார் சம்யுக்தா ஹெக்டே

‘இறைவி’ படத்தைத் தொடர்ந்து, தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்க ஒப்பந்தமானார் கார்த்திக் சுப்புராஜ். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு அக்டோபரில் துவங்கும் என தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தனுஷ் படத்தை இயக்குவதற்கு முன்பாக, பிரபுதேவா நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார். இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றது.

பிரபுதேவாவுக்கு நாயகியாக நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் சம்யுக்தா ஹெக்டே. இப்படத்துக்கு கொடுத்த அதே தேதிகளில், கன்னடத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமானார். ஆனால், கன்னட படத்திலிருந்து விலகி பிரபுதேவா படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தேதிகள் சர்ச்சை எழுந்தவுடன், “பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்தால் மட்டுமே நாயகி” என்று கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருக்கிறார். ஆனால், கன்னட அமைப்புகள் மற்றும் ரசிகர்கள் பலரும் இவருடைய சமூகவலைத்தளத்தை குறிப்பிட்டு கடுமையாக சாடினார்கள். “கன்னடத்தை விட எனக்கு என் திரையுலக வாழ்க்கையே முக்கியம்” என்று சம்யுக்தா ஹெக்டே கூறியதாகவும் செய்திகள் வெளியாகி சர்ச்சையானது.

இதனைத் தொடர்ந்து சம்யுக்தா ஹெக்டே தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “எனது தாய்மொழி கன்னடம், அதை நான் அதிகம் மதிக்கிறேன். எனது முதல் விருப்பம் எப்போதும் கன்னடமே. ஒருவரைப் பற்றி தீர்மானிக்கும் முன் தயவுசெய்து உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். சூழ்நிலையைப் புரிந்து கொள்ளுங்கள். தொலைக்காட்சியில் நீங்கள் பார்ப்பது கேட்பது எல்லாம் உண்மையல்ல. நான் தவறாக எந்த அறிக்கையும் விடவில்லை. எனது மொழியே எனது காதல். வேறு யாரும் அதை என்னிடம் விளக்க வேண்டியதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பிரபுதேவா – கார்த்திக் சுப்புராஜ் படத்திலிருந்து விலகியுள்ளார். இதனால் புதுநாயகி தேடும் படலத்தை தொடங்கியுள்ளது படக்குழு.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.