Breaking News
ஆசிய மல்யுத்த போட்டி இறுதிப் போட்டியில் சாக் ஷி மாலிக்

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி மகளிர் பிரிவில் இந்தியாவின் சாக் ஷி மாலிக், வினேஷ் போகத், திவ்யா கரன் ஆகியோர் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இதன் மூலம் இவர்கள் 3 பேரும் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

டெல்லியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் 60 கிலோ எடைப் பிரிவு கால் இறுதியில் 24 வயதான சாக் ஷி மாலிக் 6-2 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் நபிராவை வீழ்த்தினார். தொடர்ந்து நடைபெற்ற அரை இறுதியில் சாக் ஷி மாலிக் 15-3 என்ற கணக்கில் கஜகஸ்தானின் ஆயுலிம் கஸ்ஸிமோவாவை வீழ்த்தினார்.

55 கிலோ எடைப் பிரிவு கால் இறுதியில் வினேஷ் போகத் 10-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் செவரா எஸ்மருடோவாவையும், அரை இறுதியில் சீனாவின் குய் ஜாங்கை 4-0 என்ற கணக்கிலும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

69 கிலோ எடைப் பிரிவில் திவ்யா கரன் கால் இறுதியில் 2-0 என்ற கணக்கில் தைபேவின் ஷென் ஷி ஹூவாங்கையும், அரை இறுதியில் 12-4 என்ற கணக்கில் கொரியாவின் ஹையோனியோங் பார்க்கையும் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ரீது போகத் அரை இறுதியில் 0-9 என்ற கணக்கில் ஜப்பானின் சுசகியிடம் தோல்வியடைந்தார். எனினும் ரீது போகத் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.