Breaking News
ரஜினி – ரஞ்சித்’ பட அப்டேட்: கிராபிக்ஸ் பணிகளை கவனிக்க ‘பாகுபலி 2’-வில் பணிபுரிந்தவர் ஒப்பந்தம்

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தின் கிராபிக்ஸ் பணிகளை மேற்கொள்ள ‘பாகுபலி 2’ படத்தில் பணிபுரிந்த பீட்டே டிராப்பர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘கபாலி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு மே 28-ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளது. இப்படத்தை தனுஷ் தயாரிக்கிறார்.

இப்படத்திற்கான போட்டோ ஷூட் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. தற்போது படத்துக்கான நடிகர், நடிகைகள் ஒப்பந்தம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கதையின் பெரும்பகுதி மும்பை தாராவி பகுதியில் நடப்பது போல அமைத்துள்ளார் ரஞ்சித். இதற்காக மும்பை தாராவி போன்ற அரங்கம் அமைக்கும் பணிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்தப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

இந்நிலையில், இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்காக பீட்டே டிராப்பர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக பெரிதும் பாராட்டப்பட்டு வரும் ‘பாகுபலி 2’ படத்தின் கிராபிக்ஸ் குழுவில் ஈடுபட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தாராவி அரங்கில் காட்சிப்படுத்தப்படும் காட்சிகள் அனைத்தையும் மும்பையில் உள்ள தாராவி பகுதியில் படப்பிடிப்பு செய்தது போல இருப்பது போன்ற பணிகளை பீட்டே டிராப்பர் கவனிக்கவுள்ளார்.

மேலும், ‘மெட்ராஸ்’ மற்றும் ‘கபாலி’ படத்தில் பணிபுரிந்த எடிட்டர் பிரவீன் கே.எல் இந்தப் படத்தில் தேதிகள் பிரச்சினை காரணமாக பணிபுரியவில்லை. இதனால் வேறு யார் இதன் எடிட்டிங் பணிகளை கவனிக்கவுள்ளார் என்பது விரைவில் தெரியவரும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.