Breaking News
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் சாதனையுடன் தங்கம் வென்றார் ரஷ்ய வீரர்: இந்திய வீரருக்கு 5-வது இடம்

எஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனிச் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ரவி குமாரால் 5-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

தகுதி சுற்றில் ரவி குமார் 629.1 புள்ளிகள் குவித்து 4-வது இடம் பிடித்தார். ஆனால் பதக்கம் வெல்வதற்கான சுற்றில் அவரால் 185.7 புள்ளிகள் சேர்த்து 5-வது இடமே பிடிக்க முடிந்தது. உலகக் கோப்பையில் 2-வது முறையாக பங்கேற்றுள்ள ரவி குமார் கடந்த முறை டெல்லியில் நடைபெற்ற தொடரில் 8-வது இடத்தை பிடித்திருந்தார்.

இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் செர்ஜி கமென்ஸ்ஸ்கி உலக சாதனையுடன் 250.9 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ரஷ்யாவின் விளாடிமிர் மாஸ்லெனிக்கோவ் வெள்ளிப் பதக்கமும், பெல்லாரசின் விட்டாலி பப்நோவிச் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

இந்த பிரிவில் மற்ற இந்திய வீரர்களான சத்யேந்திர சிங், தீபக் குமார் ஆகியோரால் தகுதி சுற்றில் முறையே 46 மற்றும் 84-வது இடமே பிடிக்க முடிந்தது. முன்னணி வீரர்களான ஹங்கேரியை சேர்ந்த பீட்டர் ஷிடி, இஸ்வென் பெனி, ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற உக்ரைனின் ஷெரி குலிஷ், ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய பெல்லாரசின் இல்லியா சார்ஹிகா, முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான ருமேனியாவின் அலின் மொல்டோவியனு ஆகியோரும் தகுதி சுற்றுடன் வெளியேறினர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.