Breaking News
இந்தியாவில் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு உறுதி செய்தது

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஜிகா வைரஸ் இந்தியாவிலும் ஏற்கெனவே நுழைந்திருப்பது தெரியவந்துள்ளது. கர்ப்பிணி உட்பட 3 பேருக்கு இந்த பாதிப்பு இருந்ததை உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் பாபுநகர் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி உட்பட 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்ததை சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட 3 ஆய்வக சோதனைகள் உறுதிப்படுத்தி இருப்பதாக இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஜிகா வைரஸ் பரவலை கண்டுபிடிக்கவும் அதைத் தடுக்கவும் தேவையான கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இது வரை சுமார் 50 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 3 பேருக்கு மட்டுமே இந்த வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வைரஸ் பாதிப்புக் குள்ளானவர்களுக்கு முதலில் லேசான காய்ச்சல் வரும். பின்னர் தோலில் அரிப்பு, தடை மற்றும் மூட்டு வலி அல்லது தலைவலி ஏற்படும். இந்த அறிகுறிகள் 2 முதல் 7 நாட்களுக்கு இருக்கும். பகல் நேரத்தில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களே ஜிகா வைரஸை பரப்புகின்றன.

இந்த வைரஸால் பாதிக் கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு, சிறிய தலை, நரம்பு மண்டல பாதிப்புடன் குழந்தைகள் பிறக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர, மூளை பாதிப்பு, பார்வைக்குறைவு, காது கேளாமை உள்ளிட்ட பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.