Breaking News
விரைவு போக்குவரத்து கழகம் மந்தம் : தனியார் பஸ்களை தேடும் பயணியர்

அரசு விரைவு போக்குவரத்து கழகமான, எஸ்.இ.டி.சி.,யின் செயல்பாடுகள், ஆமை வேகத்தில் உள்ளதால், தொலைதுார பயணத்துக்கு, தனியார் வாகனங்களை தேர்வு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரிக்கு, 419 பஸ்களையும், மாநிலத்திற்குள், 664 பஸ்களையும் இயக்கி வருகிறது.
பயணியருக்கு விரைவான சேவை வழங்கும் வகையில், 2011 முதல், www.tnstc.in என்ற, இணையதளம் வழியே, டிக்கெட் பெறும் முறை செயல்படுகிறது. 2015 – 16ல், 44.73 சதவீதமாக இருந்த, டிக்கெட் புக்கிங், படிப்படியாக குறைந்து வருகிறது. பராமரிக்கப்படாத பஸ்கள், முறைப்படுத்தப்படாத வழித்தடங்கள், நேர மேலாண்மை இன்மை போன்ற காரணங்களால், அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களை, பயணியர் தவிர்த்து வருகின்றனர். இணையதளத்தில், டிக்கெட் முன்பதிவுக்கு முயன்றால், நீண்ட நேரம் ஆவதோடு, டிக்கெட் உறுதியாகும் நேரத்தில், இணைய தள செயல்பாடு முடங்கி விடுகிறது. டிக்கெட் பதிவு செய்யப்பட்டு விட்டதா, பயணிக்கலாமா என்ற விபரங்களை, எஸ்.இ.டி.சி., நிர்வாகம், மின்னஞ்சலாகவோ, எஸ்.எம்.எஸ்., ஆகவோ அனுப்புவதும் இல்லை. சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள, 1800 -419 -4287 என்ற, உதவி மையத்துக்கு அழைத்தால், அழைப்பு கிடைப்பதில்லை.மேலும், 044 – -4907 6316 என்ற, வங்கி சேவை மையத்தை தொடர்பு கொண்டால், ‘புக்கிங் ஹிஸ்டரியில் பாருங்கள்; டிக்கெட் முன்பதிவாகவில்லை என்றால், 15 வேலை நாட்களில், உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் திரும்பி விடும்’ என்ற, பதிலை கூறுகின்றனர்.இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகும் பயணியர், எஸ்.இ.டி.சி., நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், இணையதளத்தை புதுப்பிக்கவில்லை என, குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பண்டிகை காலங்கள், வார இறுதி நாட்களில், ஒரே நேரத்தில், அதிக பயணியர் முன்பதிவு செய்வதால், சர்வர் வேகம் குறைகிறது. அது, விரைவில் சரி செய்யப்படும்’ என்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.