கொடுங்கையூர் மின்சாரம் தாக்கி குழந்தைகள் பலி : 3 மின்வாரிய அதிகாரிகள் சஸ்பெண்ட்
தமிழகத்தில் தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 48 மணிநேரமாக பரவலாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக வட சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், கொடுங்கையூரில் உள்ள ஆர்.ஆர். நகர் பகுதியில் தேங்கி நின்ற மழை நீரில் இன்று காலை 2 குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தன. மழை நீரில் மின்சார கம்பி அறுந்து கிடந்ததை அறியாத இரு சிறுமிகள் அந்த கம்பியை தெரியாமல் மிதித்தனர். மின்சாரம் தாக்கிய அதிர்ச்சியில் அவர்கள் இருவரும் தூக்கி எறியப்பட்டனர். இதை கவனித்த அக்கம்பக்கத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமிகளை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இரு சிறுமிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் போலீசார் . மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமிகள் பாவனா, யுவஸ்ரீ என தெரியவந்து உள்ளது. இது குறித்து அமைச்சர் தங்கமணி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லபட்டு இழப்பீடு வழங்கப்படும். என்றும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
இதற்கு கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கொடுங்கையூர் குழந்தைகளின் கொடுஞ்சாவிற்கு அனுதாபமும் நிதியுதவியும் போதாது இனியும் நிகழாதிருக்க ஆவனவெல்லாம் செய்ய வேண்டும் என கூறி உள்ளார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வியாசர்பாடி செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட் செய்யபட்டு உள்ளனர்.