Breaking News
காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல்: இந்தியா ஒரேநாளில் 2 தங்கம் உள்பட 5 பதக்கம் வென்றது

காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய வீரர்கள் ஷாஜர் ரிஸ்வி தகுதி சுற்றில் 581 புள்ளிகளும், இறுதிப்போட்டியில் 240.7 புள்ளிகளும் குவித்து தங்கப்பதக்கமும், ஓம்கார்சிங் தகுதி சுற்றில் 576 புள்ளிகளும், இறுதிப்போட்டியில் 236 புள்ளிகளும் எடுத்து வெள்ளிப்பதக்கமும், ஜிதுராய் தகுதி சுற்றில் 571 புள்ளிகளும், இறுதிப்போட்டியில் 214.1 புள்ளிகளும் எடுத்து வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா காத்கர் தகுதி சுற்றில் 451 புள்ளிகளும், இறுதிப்போட்டியில் 249.8 புள்ளிகளும் குவித்து தங்கப்பதக்கமும், மற்றொரு இந்திய வீராங்கனை அஞ்சும் மொட்ஜில் தகுதி சுற்றில் 414.1 புள்ளிகளும், இறுதிப்போட்டியில் 248.7 புள்ளிகளும் எடுத்து வெள்ளிப்பதக்கமும் வென்றனர். சிங்கப்பூர் வீராங்கனை மார்ட்டினா லின்ட்சே வெலோசா தகுதி சுற்றில் 417.5 புள்ளிகளும், இறுதிப்போட்டியில் 224.8 புள்ளிகளும் எடுத்து வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

நேற்று ஒரேநாளில் இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கம் வென்றது. முந்தைய நாளில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தங்கப்பதக்கமும், இந்திய வீரர் தீபக்குமார் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் வெண்கலப்பதக்கமும் வென்று இருந்தனர்.

ஆண்களுக்கான ஸ்கீட் பிரிவில் இந்திய வீரர்கள் மைராஜ் அகமது கான் 5–வது இடமும், அங்கட் விர் சிங் பாஜ்வா 6–வது இடமும் பெற்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.