Breaking News
ஊழல் தடுப்பு நடவடிக்கை: சவுதியில் 11 இளவரசர்கள் கைது

சவுதி அரேபியாவில் மன்னராக சல்மான் (வயது 81) உள்ளார். பட்டத்து இளவரசராக அவரது மகன் முகமது பின் சல்மான் (32) இருக்கிறார்.

இந்த நிலையில் சவுதியில் மன்னர் சல்மான், நேற்று முன்தினம் திடீரென தனது மந்திரிசபையில் 2 அதிரடி மாற்றங்களை செய்தார்.

முதல் மாற்றம், தேசிய பாதுகாப்புத்துறை மந்திரி பதவியில் இருந்து இளவரசர் மிதெப் பின் அப்துல்லா நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக கலீத் பின் அயாப், தேசிய பாதுகாப்பு துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார்.

பொருளாதார துறை மந்திரி அதெல் பாகீஹ் மாற்றப்பட்டார். அவரது இடத்துக்கு பொருளாதார துறையின் துணை மந்திரியாக இருந்த முகமது அல் துவாய்ஜ்ரி கொண்டு வரப்பட்டுள்ளார்.

அடுத்த மிக முக்கிய மாற்றமாக, ஊழலை தடுப்பதற்காக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் 2011–ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, இதுவரை இயங்கி வந்த ‘நஜாஹா’ என்னும் ஊழல் தடுப்பு அமைப்பின் கதி என்ன என்பது பற்றி மன்னரின் உத்தரவில் ஏதும் சொல்லப்படவில்லை.

புதிய குழுவின் பணி குற்றங்களை கண்டறிவதும், குற்றவாளிகளை கண்டறிவதும், அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதும் ஆகும் என மன்னரின் உத்தரவு கூறுகிறது.

இந்தக் குழு ஊழல் தடுப்பு வழக்குகளில் புலன் விசாரணை செய்யவும், கைது வாரண்டுகள் பிறப்பிக்கவும், பயண தடை விதிக்கவும், நிதி பரிமாற்றங்களை முடக்கவும், வங்கி கணக்குகளை முடக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ஊழல் தடுப்பு சிறப்பு குழு, 10 இளவரசர்களையும், பல முன்னாள் மந்திரிகளையும் கைது செய்துள்ளதாக அல் அரேபியா டி.வி. செய்தி வெளியிட்டது. ஆனால் அது குறித்த கூடுதல் தகவல்களை அது வெளியிடவில்லை.

ஆனால் 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பின்னர் வெளியான தகவல்கள் கூறுகின்றன.

பெயர் குறிப்பிட விரும்பாத சவுதி அரேபியா அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலை தெரிவித்தார்.

ஒரே நாளில் சவுதி அரேபியாவில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகள், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.