Breaking News
ஜெயலலிதாவின் வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு: தலைமை செயலகத்தில் நடந்த விசாரணையில் ஜெ.தீபா ஆஜராகவில்லை

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை, நினைவு இல்லமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து ஐகோர்ட்டு உத்தரவின்படி தலைமை செயலாளர் அலுவலகத்தில் நேற்று நடந்த விசாரணையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஆஜராகவில்லை. அவர் சார்பில் வக்கீல் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை, நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று கடந்த ஆகஸ்டு மாதம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா வழக்கு தொடர்ந்தார்.

அதில், என் அத்தை ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றக்கூடாது என்று கடந்த ஆகஸ்டு மாதம் தமிழக தலைமை செயலாளர் உள்பட உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும், இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு விசாரித்தார். அப்போது, தனியாருக்கு சொந்தமான வீட்டை, நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று ஜெ.தீபா தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, ‘போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து ஜெ.தீபா மனு கொடுத்துள்ளார். அந்த மனுவை 4 வாரத்துக்குள் விசாரித்து, தகுந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்’ என்று கடந்த அக்டோபர் 23-ந் தேதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, அரசு செயலாளர் ஆர்.வெங்கடேசன் ஒரு கடிதத்தை ஜெ.தீபாவுக்கு கடந்த வாரம் அனுப்பியுள்ளார். அதில், ‘போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாங்கள் கொடுத்த மனுவை பரிசீலிக்க தமிழக தலைமை செயலாளருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே, இதுகுறித்து தங்களிடம் விசாரணை நடத்தவும், தங்களது கருத்தை கேட்கவும், நவம்பர் 7-ந் தேதி (நேற்று) மதியம் 3 மணிக்கு தலைமை செயலாளர் முன்பு ஆஜராக வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இதன்படி, நேற்று ஜெ.தீபா தலைமை செயலகம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை. அவர் சார்பில், அவரது வக்கீல் தொண்டன். சுப்பிரமணியன், தலைமை செயலாளர் முன்பு ஆஜராகி, நேற்று பிற்பகலில் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது, இந்த விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும், அப்போது ஜெ.தீபா நேரில் ஆஜராவார் என்றும் தலைமை செயலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.