Breaking News
சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான 150 வங்கி கணக்குகள் முடக்கம் ; ரூ1500 கோடி சொத்து கண்டுபிடிப்பு

சசிகலா குடும்பத்தினரையும் அவரது ஆதரவாளர்கள், நெருக்கமானவர்கள் என யாரையும் விட்டுவைக்காமல் வருமான வரி துறையினர் ஒரே நேரத்தில் 190 இடங்களில் தங்கள் சோதனையை கடந்த வியாழக்கிழமை தொடங்கினர். இன்று 3 வது நாளாக பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னையில் உள்ள ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகம் ஆகியவற்றில் கடந்த 9ந்தேதி வருமான வரி துறை சோதனை நடத்தியது. இதேபோன்று சசிகலாவின் உறவினர்களான திவாகரன், விவேக், கிருஷ்ணப்ரியா ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது.

விவேக்கின் வீட்டில் கடந்த வியாழக்கிழமை சோதனை நடைபெற்றபோதே அன்றிரவு அவரது ஆதரவாளர்கள் அதிகாரிகளுடன் தகராறு செய்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு விவேக்கின் வீட்டுக்கு வரும் ஆதரவாளர்களைத் தடுக்க ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.நேற்று அவர் வீட்டில் நடைபெற்ற சோதனையின் போது  ஆதரவாளர்கள் அதிகாரிகளுடன் தகராறு செய்தனர்.

திருவாரூர் மாவட்டம்  மன்னார்குடியில் திவாகரனுக்கு சொந்தமான கல்லூரியில் 3-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று  வருகிறது.  கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மன்னார்குடி சுந்தரகோட்டையில் சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு சொந்தமான செங்கமல தாயார் கல்வி அறக்கட்டளை பெண்கள் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு வருமான  வரித்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் 2 நாட்களாக சோதனை நடத்தினார்கள்.

கைப்பற்றப்பட்ட நகை, பணம், சொத்து விவரங்களை அதிகாரிகள் பட்டியலிட்டு வருகிறார்கள். தமிழகத்தில் சசிகலா உறவினர்கள் வீட்டில் நடக்கும் ரெய்டு குறித்து அறிக்கையை, மத்திய அரசிடம் வருமான வரித்துறை தாக்கல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் 355 பேரின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்கள் டெல்லி தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

அந்த அறிக்கையின் அடிப்படையில் 3 நாள் சோதனையில் மொத்தம் ரூ.5.5 கோடி ரொக்கப் பணம், 15 கிலோதங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் 150 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ரூ.1000 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலி நிறுவனங்கள் மூலம் ரூ.150 கோடி மதிப்புள்ள 40 சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளது. பெயரளவிலான சில போலி நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நேரடி வரி விதிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வருமான வரி சோதனை நீடிப்பதால் சசிகலா உறவினர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சோதனை நீடிப்பதால் அனைவரும் 3-வது நாளாக  வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.

வருமான வரித்துறையினரின் இந்த அதிரடி சோதனை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.