Breaking News
இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை வானிலை மையம் அறிவிப்பு

தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் வட கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது. வழக்கத்தை விட ஒரு வாரம் காலதாமதாக பருவமழை தொடங்கினாலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த வட கிழக்கு பருவமழை தொடங்கிய ஓரிரு நாட்களில் குறைவான மழை பெய்தாலும், கடந்த 31-ந் தேதி முதல் பருவமழை அதன் உக்கிரத்தை காட்டியது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சில வட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

இதனால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல குடியிருப்பு பகுதிகள் மழை நீரில் மூழ்கின. சென்னையில் வழக்கத்தை விட அதிகமாக பெய்த கனமழையால் மாநகரமே ஸ்தம்பித்தது. பல குடியிருப்புகள் நீரில் மூழ்கின. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். இருந்தபோதும், சென்னை மக்களின் தண்ணீர் பிரச்சினைக்கு ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மழை சற்று ஓய்ந்ததால் சென்னையில் தாழ்வான பகுதிகள் மற்றும் பள்ளி வளாகங்களில் தேங்கியிருந்த மழைநீர் வடிய தொடங்கியது. சில நாட்களாக தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த பள்ளிகள் திறக்கப்பட்டன.

சென்னையில், நேற்று முன்தினமும், நேற்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை நேரத்தில் லேசான சாரல் மழை பெய்தது.

இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் அடுத்த 48 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால் அடுத்து வரும் 2 தினங்களில் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தை பொறுத்தமட்டில் தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் கனமழை பெய்யும்.

சென்னையை பொறுத்த வரையில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் இதுவரைக்கும் வழக்கமாக தமிழகத்தில் 44 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை 25 செ.மீ மழை தான் பெய்து உள்ளது. இந்த மழைப் பொழிவானது இயல்பான மழை அளவைவிட மிகவும் குறைவு.

சென்னையை பொறுத்தமட்டில் இதுவரை 34 செ.மீ மழை தான் பெய்திருக்க வேண்டும். ஆனால் 67 செ.மீ. மழை பெய்து உள்ளது. இது இயல்பை விட 66 சதவீதம் அதிகம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

செவ்வாய்க்கிழமை தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.