Breaking News
மீண்டும் கர்நாடக முதல்வராவேன் குமாரசாமிக்கு கிலியை ஏற்படுத்திய சித்தராமைய்யா

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நான் மீண்டும் முதல்வராவதை தடுக்கிறார்கள்; மக்கள் விரும்பினால் மீண்டும் ”கர்நாடக முதல்வர் ஆவேன்”- என சித்தராமைய்யா கூறி உள்ளார். இது கர்நாடக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், குறைந்த தொகுதிகளை மட்டுமே கைப்பற்றிய மதசார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜகவால் 8 எம்.எல்.ஏக்கள் குறைவாக இருந்ததால் முதல்வராக பதவி ஏற்றும், பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் பதவி விலகினார் எடியூரப்பா.

அதைத்தொடர்ந்து வெறும் 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற மதசார்பற்ற ஜனதாதளம் காங்கிரஸ் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தபோதிலும் குமாரசாமிக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்தது முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்பட்டது.

மேலும் அவர் எந்த நேரத்திலும் குமராசாமி ஆட்சியை கவிழ்ப்பார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில், கர்நாடக மாநிலம் ஹசனில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு முன்னாள் முதல்வர் சித்தராமையா பேசினார்.

அப்போது, ‘மக்களின் ஆசி கிடைத்தால் மீண்டும் கர்நாடக முதல்வராவேன் என்று கூறினார். தான் 2வது முறையாக முதல்வ ராவதை எதிர்க்கட்சிகள் கைகோர்த்து தடுத்துவிட்டதால் எதிர்பாராதவிதமாக என்னால் முதல்வராக முடியவில்லை, ஆனால் அதுவே இறுதியல்ல’ என்று கூறினார்.

சித்தராமையாவின் பேச்சு கர்நாடக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குமாரசாமியின் ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருவதாக சித்தராமையாவின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.