Breaking News
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு புதிய தூய்மை திட்டம் – பிரதமர் அறிவிப்பு

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தூய்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்காக கடந்த 2014-ம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ந் தேதி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக புதிய தூய்மை திட்டம் ஒன்றை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. ‘தூய்மையே உண்மையான சேவை’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டத்தை பிரதமர் மோடி வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்கிவைக்கிறார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

மகாத்மா காந்தி பிறந்த 150-வது ஆண்டை அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி நாம் தொடங்குகிறோம். பாபுவின் (காந்தியடிகள்) கனவை நிறைவேற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும், வரலாற்று சிறப்பு மிக்க தூய்மை இந்தியா திட்டமும் அன்றைய தினத்தில் 4-வது ஆண்டை நிறைவு செய்கிறது. இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் அனைவரையும் நான் வணங்குகிறேன்.

இதன் தொடர்ச்சியாக வருகிற 15-ந் தேதி காலை 9.30 மணியளவில் தூய்மையே உண்மையான சேவை என்ற திட்டத்தை நாம் தொடங்குகிறோம். அன்றைய தினம், தூய்மை இந்தியா திட்டத்தில் அயராது உழைத்து வரும் தொண்டர்களுடன் கலந்துரையாடுவதை நான் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன்.

இந்த திட்டத்தில் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தை வலுப்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இதுவே மகாத்மா காந்திக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை ஆகும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.