Breaking News
ரபேல் போர் விமான ஒப்பந்தம்: பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே திடுக்கிடும் தகவல்

ரபேல் போர் விமானங்களை இந்தியாவில் தயாரிப்பதற்கு பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட்டை (எச்.ஏ.எல்.) புறக்கணித்து விட்டு, ரிலையன்ஸ் நிறுவனத்தை மத்திய அரசு தேர்ந்தெடுத்தது சர்ச்சை ஆகியுள்ளது.

இதுகுறித்து எச்.ஏ.எல். முன்னாள் தலைவர் சுவர்ணா ராஜு அளித்த பேட்டியில், ‘‘நான்காம் தலைமுறை போர் விமானமான, 25 டன் எடையுள்ள சுகோய்–30 ரக போர் விமானங்களையே எச்.ஏ.எல். தயாரிக்கும்போது, ‘ரபேல்’ விமானங்களை எளிதாக தயாரித்து இருக்க முடியும்’’ என்று கூறினார்.

இதையடுத்து, இவ்விவகாரத்தில் பொய் கூறிய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

இந்தநிலையில், ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக அனில் அம்பானி நிறுவனத்தை இந்திய அரசு தான் பரிந்துரை செய்தது என்று பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே அந்நாட்டு பத்திரிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே அந்நாட்டு பத்திரிக்கையில் வெளியிட்டுள்ள தகவலின்படி,

பிரான்ஸ் நாட்டின் ரபேல் ரக போர் விமானம் தயாரிப்பதற்காக டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. பிரான்சு நாட்டுக்கு எந்த ஒரு வேறு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அம்பானி குழுமத்துடன். மட்டுமே இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மத்திய மோடி அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

இந்தப் பேட்டியை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி, மத்திய அரசு மீது கடுமையாக சாடியுள்ளது. மோடி அரசு பின்னிய பொய் வலைகளை பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே அம்பலப்படுத்தி விட்டார். இந்த ஒப்பந்தத்தில், ரிலையன்ஸ் குழுமத்தை இணைத்து வைத்தது மோடி அரசுதான் என்று காங்கிரஸ் வெளியிட்ட டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலின் உண்மைதன்மை குறித்து ஆய்வு செய்து வருவதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவிக்க இந்தியாவிற்கான பிரான்ஸ் தூதரகம் மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.