Breaking News
எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார் எம்.எல்.ஏ. கருணாஸ்

திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் கடந்த ஞாயிறு அன்று சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் சென்னை காவல்துறை அதிகாரிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கருணாஸ் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ-வாகவ உள்ளார். சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர் காவல்துறை அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசினார்

கருணாஸ் பேசும் போது சாமி, சிங்கம் படத்தையெல்லாம் பார்த்துட்டு டைட்டா சட்டை போட்டுகிட்டு கூலிங்கிளாஸ் போட்டுகிட்டு இரண்டு மூன்று போலீஸ் அதிகாரிங்க அதே மாதிரி நடந்துக்குறாங்க. அவங்களுக்கு மேல் அதிகாரிங்க அட்வைஸ் பண்ணனும். வரலாறு எனக்கும் தெரியும். சட்டமன்றத்திலேயே பேசினவன் தான் நான். உங்களுக்கு எல்லாம் போதை ஏத்தினா தான் கொலை செய்ய துணிச்சல் வரும். ஆனால் நாங்கள் தூங்கி எழுந்தாலே செஞ்சிடுவோம். பல் துலக்கும் நேரத்தில் நாங்கள் கொலை செய்துவிடுவோம் என பேசியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாக தெரிவித்தார்.

மேலும், காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சவால் விடுத்த அவர், முடிந்தால் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதிப்பார்க்குமாறு சவால் விடுத்தார். ஜாதி ரீதியாகவும் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கருணாஸ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து, முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். யூ டியூப்பில் வெளியான வீடியோவை ஆதாரமாக கொண்டு 8 பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்குகள் பதியப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை சாலிகிராமத்திலுள்ள கருணாஸ் வீட்டிற்கு போலீசார் வருகை தந்துள்ளனர். இதில் 2 காவல் ஆய்வாளர்கள், 2 உதவி ஆணையர்கள் மற்றும் 100க்கும் மேற்பட போலீசார் கருணாஸ் வீட்டின் முன்பு குவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், என் மீதான வழக்கை நான் நேரடியாக நீதிமன்றத்தில் சந்திக்க இருக்கிறேன். பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக 307-வது பிரிவின் கீழ் (கொலை முயற்சி) கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? என்னை கைது செய்ய சபாநாயகரிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற்றார்களா என தெரியவில்லை எனக் கூறினார்.

இதையடுத்து சாலிகிராமத்தில் கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவரிடம் 3 மணி நேரத்திற்கு மேலாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து கைதான எம்.எல்.ஏ. கருணாஸ் எழும்பூர் 13ஆவது நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். அவருடன் கைதாகிய செல்வம், கார்த்திக், நெடுமாறன் ஆகியோரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தும் முன்னர், சென்னையிலுள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ. கருணாஸிற்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதனிடையே தமிழக அரசு, காவல்துறைக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதாக முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.